கொரோனா உடன் போராடி வரும் இந்தியாவிற்குச் சீனாவில் இருந்து அதிகளவிலான மருத்துவக் கருவிகள் வருகிறது. அரசு மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இந்த வேளையில் சீன மருத்துவக் கருவிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஹாங்காங்-ல் இருக்கும் இந்திய கவுன்சில் ஜெனரல் பிரியங்கா சவுகன், இந்தியாவிற்கு அனுப்பப்படும் மருத்துவப் பொருட்களின் மீதான விலை உயர்வை உடனே நிறுத்த வேண்டும், ஏன் இந்தத் திடீர் உயர்வு..? இதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிற்குத் தேவையானவற்றை முழுமையாகவும், உடனடியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும் என அனைத்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கருவிகளின் விலை
மருத்துவ கருவிகளின் விலை உயர்வுக்கு மிக முக்கியமாக மூலப் பொருட்களின் விலை உயர்வு, சரக்கு விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்பே விலை உயர்வுக்குக் காரணம் என இந்திய கவுன்சில் ஜெனரல் பிரியங்கா சவுகனின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் ஹூவா சுன்யிங்.
ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்
இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் மருத்துவக் கருவிகளில் மிக முக்கியமானதாக விளங்கும் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதேபோல் இந்தியாவில் இருந்து பல தரப்புகளில் இருந்து ஆர்டர் குவிந்து வருகிறது.
மூலப் பொருட்கள் விலை மற்றும் பற்றாக்குறை
இந்தியாவில் இருந்து சீன நிறுவனங்களுக்கு மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதிக ஆர்டர்கள் குவியும் காரணத்தாலும், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு உலகம் முழுவதும் டிமாண்ட் மற்றும் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் விலை உயர்ந்துள்ளது.
சரக்கு விமானப் போக்குவரத்து
இதேபோல் சரக்கு விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதற்கு மிக முக்கியக் காரணம் Sichuan Airlines இந்தியாவிற்கு வரும் 11 சரக்கு விமானங்களுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. இதனால் விமானம் வாயிலான இறக்குமதி அதிகளவில் குறைந்துள்ளது.
சீனா ஆலோசனை
இந்தப் பிரச்சனையைச் சரி செய்யச் சீன அரசு விமானப் போக்குவரத்துத் துறை ஆலோசனை செய்யும் மறைமுகமாகப் பதில் அளித்துள்ளார் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங்.
சீன இறக்குமதிகள்
ஏப்ரல் மாதம் மட்டும் சீனாவில் இருந்து இந்தியாவிற்குச் சுமார் 26,000 வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள், 15,000 மானிட்டர்கள், 3800 டன் அளவிலான மருந்து பொருட்கள் மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளது என ஹூவா சுன்யிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து சுமார் 70,000 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களுக்கு ஆர்டர் சீனாவில் குவிந்துள்ளது.