இந்த செய்தியை எழுதும் முன்பு நான் படித்த ஒரு செய்தி தான் நியாபகத்திற்கு வருகிறது. அதாவது சீனா தொற்று நோயிலிருந்து கூட லாபம் பார்ப்பதாகவும், தரமற்ற மருந்துவ உபகரணங்களை விற்பதாகவும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருந்தார்.
அது தற்போது உண்மைதானே என எண்ணத் தோன்றுகிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறது சீனா.
சீனாவில் ராபிட் டெஸ்ட் கருவிகள் வந்தால், எளிமையாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விடலாம். ஆக கொரோனாவினை இந்தியாவில் இருந்து ஈஸியாக விரட்டி விடலாம் என்றும் கற்பனை உலகில் மிதந்து கொண்டு இருந்தவர்களுக்கு, சீனா பெரும் ஆப்பாக வைத்துள்ளது.
பிசிஆர் கருவிகள் மூலம் சோதனை
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸினை கட்டுக்குள் கொண்டு வர, தொடர்ந்து பல முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை பிசிஆர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பிசிஆர் சோதனைக்கு நேரம் அதிகமாவதால், கொரோனா சோதனை மேற்கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டது.
ராபிட் டெஸ்ட் கருவிகள்
இதனால் துரிதமாக இதனை அறியும் வகையில் ராபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கியது. ஆனால் இந்த ராபிட் டெஸ்ட் கருவிகளில் சோதனை மேற்கொண்டதில், தவறான முடிவுகளை காட்டியது. இன்னும் சொல்லப்போனால் சோதனையில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியது எனலாம். இதனால் இந்த கருவியில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம் என்ற கூறப்பட்டது.
ராபிட் டெஸ்ட் செய்ய வேண்டாம்
அதோடு மத்திய மாநில அரசுகள் ராபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை செய்வதை தடை செய்யவும் ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது. மேலும் இந்த கருவிகளை சீனாவிடமே திருப்பி கொடுத்து விடுமாறும் கூறியது. ஆனால் இது குறித்து சீனா தரப்பில் கவலை எழுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனா நிறுவனங்களுக்கே ஆதரவு
இது குறித்து விளக்கம் அளித்த சீன தூதர், இது கண்காணிப்பு நோக்கங்களுக்கானது என்று கூறியுள்ளார். மேலும் சீனாவின் இரண்டு மருத்துவ நிறுவனங்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி, இரண்டையும் ஆதரித்தார். Guangzhou Wondfo Biotech and Zhuhai Livzon Diagnostics என்ற இரு நிறுவனங்களும் ஏற்கனவே இது குறித்து அறிக்கைகள் வெளியிட்டதை நானும் கவனித்தேன்.
அங்கீகரிப்பு பெற்று தான் விற்பனை செய்தோம்
அதோடு அவர்கள் இருவரும் சீனாவின் தேசிய மருத்துவ நிர்வாகத்திடம் சான்றிதழை பெற்றுள்ளனர். அதோடு சீனா மற்றும் ஏற்றுமதி நாடுகளின் தரத்தினை பூர்த்தி செய்துள்ளன. எல்லாவற்றையும் விட தேசிய வைரலாஜி நிறுவனத்திடமும் அனுமதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகள் ஐரோப்பா, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு வருகிறது என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அது தவறு
மேலும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், சீனா இந்தியாவினை நேர்மையாக ஆதரிப்பதோடு மட்டும் அல்லாமல், உதவ வேண்டும் என்றும் உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தரம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சில நபர்கள் சீனா பொருட்கள் தவறானவை என்ற எண்ணத்துடன் பார்ப்பது தவறு என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியாவுடன் இருப்போம்
மேலும் இந்தியா கொரோனா வைரஸ் உடன் எதிர்த்து போராடுவதற்கு நாங்கள் உறுதுணையுடன் கூட இருப்போம். இந்தியாவின் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்போம். மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். மேலும் நமது மக்களின் பாதுகாப்பினை வலுபடுத்த தொடர்ந்து ஒத்துழைப்பு தருவோம் என்றும் ஜி ரோங் கூறியுள்ளார்.