இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையில் இருக்கும் உறவு முறையும், நட்பும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.
சமீபத்தில், சீன ராணுவத்தின் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்த பின், இந்தியா முழுக்க சீனாவுக்கு எதிரான ஒரு புறக்கணிப்பு உணர்வு மிகக் கடுமையாக எழுந்தது.
அதன் விளைவாக, இந்திய அரசு, சீன இறக்குமதிகளுக்கு வரி விதிப்பது தொடங்கி ஒப்பந்தங்களை ரத்து செய்வது, 59 முக்கிய சீன செயலிகளுக்கு தடை விதித்தது வரை பல நடவடிக்கைகளை எடுத்தது.
59 சீன செயலிகள்
இந்திய அரசு, தடை செய்த 59 சீன செயலிகளில் இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பைட் டான்ஸ் (Byte Dance) கம்பெனியின் டிக் டாக், ஹலோ போன்ற செயலிகளும் இருக்கின்றன. இந்த செயலிகளுக்கு தனி அலுவலகங்களும், தனியாக இந்தியாவில் ஊழியர்களும் இருக்கிறார்கள்.
வேலைக்கு ஆள் எடுப்பதில்லை
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பிரச்சனை அதிகரித்த பின் தான், பைட் டான்ஸ் கம்பெனி, தன் செயலிகளுக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்தி இருக்கிறார்களாம். அப்படி என்றால் கொரோனா காலத்தில் கூட ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு தான் இருந்தார்களா..? என்றால் யெஸ் தான் பதில்.
வேலைக்கு ஆள் எடுத்தார்கள்
கடந்த ஜனவரி 2020-ல் இருந்து பைட் டான்ஸ் கம்பெனி தொடர்ந்து வேலைக்கு ஆட்களை எடுத்துக் கொண்டு இருந்தார்களாம். அவ்வளவு ஏன், இந்த 2020-ம் ஆண்டில், ஏப்ரல் - மே கால கட்டங்களில் கூட வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தார்களாம். 59 செயலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததால், தேர்வு செய்தவர்களை தற்போது வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லையாம்.
நோ லே ஆஃப்
நம் இந்தியாவில், இந்தியர்களால் தொடங்கப்பட்ட ஓலா, ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப் கம்பெனிகள் கூட, கொரோனா வைரஸ் பிரச்சனை தலை எடுக்கும் போதே, சர சரவென பல பேரை வேலையில் இருந்து நீக்கினார்கள். ஆனால் பைட் டான்ஸ் தன் ஊழியர்களை, இதுவரை லே ஆஃப் செய்யவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Retain employees
சீனாவின் பைட் டான்ஸ் கம்பெனிக்கு, இந்தியாவில் 2,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இந்த 2,000 ஊழியர்களையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதோடு, கம்பெனியில் ஒரு நிலைத் தன்மை இருப்பதை உணரச் செய்ய, ஊழியர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு திட்டத்தையும் தொடங்கி இருக்கிறார்களாம்.
அழுத்தமாகச் சொல்கிறது பைட் டான்ஸ்
பைட் டான்ஸ் நிறுவனத்தில், எந்த ஒரு லே ஆஃப்-ம் இல்லை. பைட் டான்ஸ் கம்பெனி நிலையாக இருக்கிறது என அழுத்தம் திருத்தமாக, கம்பெனி தரப்பில் இருந்து, ஊழியர்களுக்கு சொல்லி இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த நெருக்கடியான கால கட்டத்திலும், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பாமல் இருக்கும் பைட் டான்ஸ் கம்பெனியை உண்மையாகவே மனமாற பாராட்டலாம்.
வேறு பிரிவில் வேலை
பைட் டான்ஸ் நிறுவனம், இந்தியாவில், பெரிய பதவிகளில் இருக்கும் ஊழியர்களை, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாட்டு ப்ராஜெக்ட்களில் மடை மாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். ஒரு பக்கம், பைட் டான்ஸ் கம்பெனி மடை மாற்றும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும், மறு பக்கம், ஊழியர்கள் வெளியே வேறு கம்பெனிகளில் வேலை தேடத் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஊழியர்கள் எண்ணம்
இப்போது பைட் டான்ஸ் ஊழியர்களை லே ஆஃப் செய்யவில்லை சரி. ஆனால் விரைவில் டிக் டாக் & ஹலோ போன்ற நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றால், எத்தனை நாட்களுக்குத் தான் வேலை இல்லாமல் ஊழியர்களுக்கு வெறுமனே சம்பளத்தைக் கொடுத்து வைத்துக் கொள்வார்கள்? என்கிற கேள்வியையும் ஊழியர்கள் கேட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே இந்தியா சீன பிரச்சனையில் தங்கள் கெரியர் அடி வாங்கி விடக் கூடாது என்று தெளிவாக வேறு கம்பெனிகளுக்கு மாறிக் கொண்டு இருக்கிறார்கள் பைட் டான்ஸ் ஊழியர்கள்.
ஊழியர்கள் வேலை கேட்டு விண்ணப்பம்
சீனியர், நடுத்தர மற்றும் கீழ் நிலைப் பதவிகளில் வேலை பார்ப்பவர்கள் என பைட் டான்ஸின் எல்லா வகை ஊழியர்களும், இந்தியாவில் இருக்கும் மற்ற செயலிகளான Chingari, Trell, Bolo Indya, Moj, Josh, Mitron போன்றவைகளில் வேலை கேட்டு விண்ணப்பித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதை சில இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளும் ஆமோதித்து இருக்கின்றன.
ட்ரெல் நிறுவனர்
சீன கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு நல்ல திறன் இருக்கிறது. அவர்கள் தற்போது இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் வேலை பார்க்க விரும்புகிறார்கள். இதுவரை எங்களுக்கு பைட் டான்ஸில் இருந்து சுமார் 100 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அதில் சிலர், பைட் டான்ஸில் மூத்த பதவிகளில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விண்ணப்பங்கள், இந்தியாவில் டிக் டாக் தடை பிரச்சனை விரைவில் சரி ஆகாது, இது ஒரு சிக்கலான நிலை என்பதையே உணர்த்துகிறது என்கிறார் ட்ரெல் செயலியின் துணை நிறுவனர் புல்கித் அகர்வால்.
டிக் டாக் மைக்ரோசாஃப்ட் டீல்
ஆரம்பத்தில் டிக் டாக் கம்பெனியின் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா செயல்பாடுகளை மட்டுமே மைக்ரோசாஃப்ட் வாங்க இருந்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் சமீபத்தில் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில் இந்தியா & ஐரோப்பிய நாட்டு செயல்பாடுகளையும் சேர்த்து வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. டிக் டாக் மைக்ரோசாஃப்ட் கம்பெனி ஆகுமா? பொருத்திருந்து பார்ப்போம்.