உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் உற்பத்தியில் துவங்கி அனைத்து துறையிலும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது சீனாவின் மிகப்பெரிய திட்டமாக உள்ளது.
இதன் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய rare-earth நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.
அரிய கனிம உலோகங்கள்
உலகிலேயே அரிய வகைக் கனிமங்களாகக் கருதப்படும் 17 உலோக கனிமங்களைத் தான் rare-earth elements என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரிவில் ஏற்கனவே சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் உற்பத்தி அளவு மற்றும் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவும், சர்வதேச வர்த்தகச் சந்தையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அரசு நிறுவனங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் அரசு நிறுவனங்கள், அமைப்புகளை, தனியார்மயமாக்கும் வேளையில் சீனாவில் 3 அரசு நிறுவனங்களை இணைந்து உலக நாடுகளுக்கும், சர்வதேச வர்த்தகச் சந்தைக்குச் சவால் விடவும் சீனா அரசு தயாராகியுள்ளது.
சீன அரசு
சீன அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சீனா மின்மெட்டல் கார்ப், அலுமினியம் கார்ப் ஆப் சீனா, Ganzhou Rare Earth குரூப் ஆகிய 3 நிறுவனங்களையும் இணைத்து China Rare-Earths Group என்ற உலகளாவிய பெரிய சுரங்க உற்பத்தி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு
இந்தக் கூட்டணி நிறுவனம் சீனாவின் தெற்கு பகுதியில் சுரங்கம் மற்றும் கனிம வளம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளதாகச் சீனா பங்குச்சந்தைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தெற்கு பகுதி டார்கெட்
சீன அரசு செப்டம்பர் மாதம் Rare-Earth பிரிவில் பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கம் செய்யத் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் தனிப்பட்ட முறையில் ஆதிக்கம் செலுத்தும் இரு நிறுவனத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது தெற்கு பகுதிக்கான China Rare-Earths Group-ஐ உருவாக்கியுள்ளது.
ஸ்மார்ட்போன் முதல் பைட்டர் ஜெட்
ஸ்மார்ட்போன் முதல் பைட்டர் ஜெட் வரையில் தயாரிக்கப் பயன்படுத்தும் Rare-Earth பிரிவில் இருக்கும் 17 முக்கியமான கனிம உலோகங்களை உற்பத்தி செய்வதில் சீனா ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
3 அரசு நிறுவனங்கள் இணைப்பு
இந்த 3 அரசு நிறுவனத்தை இணைப்பதன் மூலம் இந்நிறுவனத்தில் இருக்கும் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்தி அதிகளவிலான உற்பத்தி செய்ய முடியும். மேலும் சந்தை தேவை மற்றும் அதன் விலையை நிர்ணயம் செய்யும் ஆதிக்கத்தையும் இந்த China Rare-Earths Group பெரும்.
பங்கு பிரித்தல்
மேலும் புதிய கூட்டணி நிறுவனத்தில் சீன அரசின் சொத்துகள் மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் 31.21 சதவீத பங்குகளையும் மற்ற 3 நிறுவனங்கள் (சீனா மின்மெட்டல் கார்ப், அலுமினியம் கார்ப் ஆப் சீனா, Ganzhou Rare Earth குரூப்) தலா 20.33 சதவீத பங்குகளையும் பெறும் எனச் சீனா அரசு தெரிவித்துள்ளது.