சீன அரசு அந்நாட்டு டெக் நிறுவனங்கள் மீது எடுத்துவந்த கடுமையான சோதனை, ஆய்வு, தடை, அபராத நடவடிக்கையின் முற்றுப்புள்ளியாகப் புதிய சட்டத்தை அமலாக்கம் செய்துள்ளது.
இப்புதிய சட்டதிட்டத்தின் மூலம் டெக் நிறுவனங்கள் மக்களின் தரவுகளைச் சேகரிப்பில் இருந்து, அதனை எப்படிக் கையாள வேண்டும் என்பது வரையில் கடுமையாக விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உடன் தகவல் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீன அரசு எச்சரித்துள்ளது.
சீனாவின் புதிய தகவல் பாதுகாப்பு விதிகள்
சீன அரசு இன்று அமலாக்கம் செய்துள்ள புதிய தகவல் பாதுகாப்பு விதிகள் மூலம் ஹாங்காங் பங்குச்சந்தையின் ஹாங் செங் டெக் இன்டெக்ஸ்-ல் இருக்கும் 30 டெக் நிறுவனங்களின் குறியீடு சுமார் 4.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்தக் குறியீட்டில் தான் டென்சென்ட், அலிபாபா உட்பட அனைத்து நிறுவனங்களும் உள்ளது.
சீன நாடாளுமன்றத்தில் தாக்கல்
இன்று சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள புதிய தகவல் பாதுகாப்பு விதிகளை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அதற்குள் டெக் நிறுவனங்கள் இச்சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் வண்ணம் தனது கட்டமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் எனச் சீன அரசின் செய்தி தளமான ஜின்ஹூவா வெளியிட்டுள்ளது.
எதற்காக இந்தக் கட்டுப்பாடு
இதேவேளையில் சீனாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும் டெக் சேவை நிறுவனமான டென்சென்ட், டெக் நிறுவனங்கள் மீதான சீன அரசின் கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. சீன டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாகத் தரவுகளைத் திரட்டி சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடுகள்.
சீன அரசு அதிரடி
சீன அரசு எதிர்வினைக்குப் பயப்படாமலும், முதலீட்டாளர்கள் நிலையைக் கருத்தில் கொள்ளாமலும் பங்குச்சந்தையில் இருக்கும் சமுக வலைத்தள நிறுவனங்கள், ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள் மற்றும் பிற டெக் நிறுவனங்கள் மீது சந்தை கட்டுப்பாட்டு விதிமுறைகளை எவ்விதமான தளர்வுமின்றிக் கையாண்டுள்ளது.
சீனா டெக் நிறுவனங்கள்
இதன் வாயிலாகவே தற்போது சீனா டெக் நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் தரவு சேமிப்பு
இப்புதிய தகவல் பாதுகாப்பு விதிகள் கீழ் வாடிக்கையாளர்கள் தரவுகளை எப்படிச் சேமிக்க வேண்டும், எப்படிக் கையாள வேண்டும், எந்த நிறுவனம் எந்தச் சூழ்நிலையில் தரவுகளைச் சேமிக்க வேண்டும், தகவல்களைத் திரட்டுவதற்கும் சேமிப்பதற்கும் முன்பு வாடிக்கையாளரிடம் கட்டாயம் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் சீன தரவுகள்
இதேபோல் சீன மக்களின் தரவுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அல்லது கொண்டு செல்வதற்குக் கடுமையான விதிமுறைகளைச் சீன அரசு விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு மூலம் சீன மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஊழியர்
மேலும் ஒவ்வொரு நிறுவனமும் அரசின் தகவல் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கிறதா என்பதை ஆய்வு செய்யத் தனிப்பட்ட முறையில் ஊழியரை நியமிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சேவை அளிக்கத் தடையில்லை
இதேபோல் தகவல்களைக் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டாலும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கத் தடை விதிக்கக் கூடாது என்பதையும் சீன அரசு இன்று வெளியிட்டுள்ள தகவல் பாதுகாப்பு விதிகளில் குறிப்பிட்டு உள்ளது.
ஆதிக்கம் செலுத்த முடியாது
இந்தக் கட்டுப்பாடுகளால் டெக் நிறுவனங்கள் இனி வர்த்தகத் துறையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாது, குறிப்பாக மோனோபோலியாக இருக்க முடியாது. இதேவேளையில் சேவைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் ஆதிக்கம் செலுத்த முடியும்.
போட்டி அதிகரிக்கும்
இதனால் இனி அனைத்து துறையிலும் போட்டி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் புதிதாகப் பல நிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதேவேளையில் ஊழியர்களுக்குத் தற்போது கிடைக்கும் அதிகப்படியான சம்பளத்தைப் பெற முடியாது.