கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் மோசமான நிலையில் எதிர்கொண்டு வரும் வேளையில், கொரோனாவின் பரவ ஆரம்பப் புள்ளியாக இருந்த சீனா கடுமையான கட்டுப்பாடுகள் உடன் கொரோனாவை வென்று அந்நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி இயல்பு நிலைக்குத் திரும்பியது மட்டும் அல்லாமல் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து அசத்தி வருகிறது.
ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் -23.9 சதவீதம் சரிந்து தத்தளித்துக் கொண்டு இருந்த அதே வேளையில் சீனா 3.2 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியா மட்டும் அல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உட்பட அனைத்து வல்லரசு நாடுகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
இந்நிலையில் தற்போது சீனா உள்நாட்டு வர்த்தகச் சந்தையில் வென்றது மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் உடனான ஏற்றுமதி, இறக்குமதியிலும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து வெற்றி கண்டுள்ளது.
சீனா
கொரோனாவை வென்றது மட்டும் அல்லாமல், அண்டை நாடுகள் உடனான பிரச்சனை மற்றும் வெள்ளம் பாதிப்புகள், மக்களின் வாழ்வியல் பாதிப்பு எனப் பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தச் செப்டம்பர் மாதம் இறக்குமதியில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் ஏற்றுமதியிலும் தொடர் வளர்ச்சியைக் கண்டு வருகிறது உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா.
இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அந்நாட்டில் உள்நாட்டு நுகர்வோர் அளவு அதிகரித்துள்ளது தெரிகிறது.
இறக்குமதி
சீனாவின் இறக்குமதி அளவீடு செப்டம்பர் மாதம் கடந்த வருடத்தை விடவும் 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் 0.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 13.2 சதவீத வளர்ச்சி வல்லரசு நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சீனாவின் இறக்குமதி 2.1 சதவீதம் சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடாலடி உயர்வு இந்நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் சந்தை சிறப்பான முறையில் உள்ளதை விளக்குகிறது.
ஏற்றுமதி
கொரோனா பாதிப்பால் தற்போது உலகம் முழுவதும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் அதிகளவில் சேவைப்படுகிறது. மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான மோகம் இந்தக் கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது சீனாவிற்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இதனால் சீனா மற்றும் சீன நிறுவனங்களின் வெளிநாட்டு விற்பனை மற்றும் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தச் செப்டம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி அளவு 9.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
சீனா - அமெரிக்கா
கொரோனா பாதிப்பிற்கு முன் சீனா அமெரிக்கா இடையில் மிகப்பெரிய வர்த்தகப் போர் இருந்தது. இது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் சீரடைந்தது. இதன் எதிரொலியாகச் சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை ஒவ்வொரு மாதமும் குறைந்துகொண்டு வருகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை
2020ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 218.57 பில்லியன் டாலராக உள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 34.24 பில்லியன் டாலராக இருந்து வர்த்தகப் பற்றாக்குறை, செப்டம்பர் மாதத்தில் 30.75 பில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது. இருநாடுகள் மத்தியிலான ஒப்பந்தம் நிறைவேற்றச் சீனா 2020ஆம் ஆண்டுக்குள் இன்னும் 172.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
மீண்டும் கொரோனா
கொரோனாவில் இருந்து சீன வென்றாலும் இன்னும் முழுமையாக வெற்றி அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவ்வபோது ஆங்காங்கே கொரோனா பாதிப்பு அடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவின் துறைமுக நகரமான Qingdao பகுதியில் 12 பேர் உள்நாட்டுத் தொற்று பரவல் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சீன அரசு Qingdao பகுதி முழுவதையும் லாக்டவுன் செய்து அடுத்த 5 நாட்களில் இப்பகுதியில் இருக்கும் 90 லட்சம் மக்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications