ரஷ்ய - உக்ரைன் போருக்கு பின்பு உலக நாடுகளின் பொருளாதாரம் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் சீனாவின் பொருளாதாரம் கொரோனா தொற்று, லாக்டவுன், வர்த்தக மந்த நிலை எனப் பல பிரச்சனைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியிருக்கும் அதிகப்படியான கடன் சுமை மற்றும் மோசடிகள் சீனாவின் நிதி நிலையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதற்கிடையில் சீனா கடன் கொடுத்த நாடுகள் அனைத்தும் அடுத்தடுத்து திவாலாகி வருவதால் பெரிய நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படும் அபாயம் சீனாவைத் துரத்துகிறது. இந்த நிலையில் தான் சீன முதலீட்டாளர்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளனர்.
சீனாவின் நிலை
ஜி ஜின்பிங் அரசு ஏற்கனவே கட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு டெக் நிறுவனங்கள் மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டுப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேறு வழிகள் இல்லாமல் தடுமாறி வருகிறது. உற்பத்தித் துறை இன்னும் பழைய நிலையை அடைய முடியாமல் சீன நிறுவனங்கள் தடுமாறி வருகிறது, இதனால் ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
டிரெட் லாக் நிலை
சீனா கிட்டத்தட்ட டிரெட் லாக் நிலையை அடையும் வேளையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வர்த்தகச் சந்தை சூடுப்பிடிக்கத் துவங்கியுள்ளது. ஆனால் இதேவேளையில் தைவான் நாட்டின் மீதான சீனாவின் நிலைப்பாடு மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்புகள் ஆகியவை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
உபரி நிதி
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சீன முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் உபரி நிதியை மீண்டும் சந்தையில் முதலீடு செய்யாமல் பாதுகாப்பான நிதியியல் திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
அமெரிக்க டாலர்
உதாரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை வர்த்தகத்திலும், சந்தை புழக்கத்திலும் கொண்டு வராமல் அமெரிக்க டாலர் வாங்குவது உட்படப் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
பத்திர முதலீடு
சீனாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் அனைவரும் அந்நாட்டில் முன்னணி வங்கிகளின் பத்திரங்கள், பெரு நிறுவன முதலீட்டுப் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. இதனால் சீன நாணயத்திற்கு எதி்ராக டாலர் மதிப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
20 வருட சரிவு
இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான சீன நாணயத்தின் மதிப்பும் சுமார் 20 வருட சரிவை எட்டியுள்ளது, இதைக் கட்டுப்படுத்த வட்டி உயர்த்தப்பட்டதால் பத்திர முதலீடுகள் கூடுதல் லாபத்தை அளிப்பதோடு, அதிகப்படியான பாதுகாப்பையும் அளிக்கிறது.
சீன முதலீட்டாளர்கள்
சீன முதலீட்டாளர்களின் இந்த நடைமுறை அந்நாட்டுப் பொருளாதாரம், வர்த்தகச் சந்தையில் தேக்க நிலையை ஏற்படுத்தும், இதனால் உற்பத்தி அதிகரிக்க முடியாமல் பொருளாதார மந்த நிலை அதாவது ரெசிஷன் நிலைக்குத் தள்ளப்படலாம் குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளதால் நிதியியல் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும்.