இந்திய டெலிகாம் சந்தையில் நடந்து வரும் குடுமிப்பிடி சண்டை பற்றிய பெரிதாக விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் ஏர்டெல் நிறுவனத்தை எதிர்த்து அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் போட்டி போட்டு வந்த நிலையில் தற்போது ஜியோ-வை எதிர்த்து போட்டிப் போட்டு வருகிறது, ஆனால் ஒரேயொரு வித்தியாசம் ஜியோ உடன் போட்டிப் போட 2 நிறுவனங்கள் மட்டுமே உள்ளது, மற்ற அனைத்து நிறுவனங்களும் விற்பனை செய்யப்பட்டோ அல்லது மூடப்பட்டது.
இந்நிலையில் ஜியோ-வை எதிர்க்க போதிய பலம் இல்லாமல் தவிக்கும் ஏர்டெல் மற்றும் ஐடியா-வோடபோன் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் வகையில் சைனாவின் மாபெரும் டெலிகாம் சேவை நிறுவனமான சைனா மொபைல் களத்தில் இறங்கியுள்ளது.
சைனா மொபைல்
டெக்னாலஜி, டெலிகாம் சேவையில் மாபெரும் புரட்சி செய்த சைனா மொபைல் நிறுவனம் இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் - ஐடியா நிறுவனங்களுடன் இணைந்து கிளவுட் நெட்வொர்க் அமைப்பை இந்தியாவில் நிறுவ பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
திட்டம்
சைனா மொபைல் டிசம்பர் மாத இறுதியிலேயே ஏர்டெல், ஐடியா-வோடபோன் நிறுவனங்களுடன் தனிதனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் சைனா மொபைல் இந்திய சந்தையில் இறங்குவது மட்டும் அல்லாாமல் ஹோல்டிங் நிறுவனமாக இருக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு நிறுவனத்தில் மட்டும் இருந்தாலும் சரி இரு நிறுவனத்தில் இருந்தாலும் சரி எனச் சைனா மொபைல் கூறியிருக்கிறது.
ஹோல்டிங் நிறுவனம்
ஹோல்டிங் நிறுவனம் என்றால் ஒரு நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நிறுவனத்தின் திட்டங்கள், விதிமுறைகள் மாற்றுவது, முக்கியமான நிர்வாக முடிவுகள் என அனைத்திலும் பங்கு விகிக்கும். இதைத் தான் சைனா மொபைல் பெற வேண்டும் என நினைக்கிறது.
மேலும் இந்த ஹோல்டிங் நிறுவனம் மற்ற நிறுவனங்களின் சொத்துக்களையும் நிர்வாகம் செய்ய முடியும்.
சீனா நிறுவனங்கள்
இந்தியாவில் தற்போது பல ஆயிரம் சீன நிறுவனங்கள் உள்ளது, அதிலும் டெலிகாம், டெக்னாலஜி துறையில் அதிகளவிலான நிறுவனங்கள் உள்ளது. இந்நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளையும், தொழில்நுட்ப கட்டுமானத்தை நம் நாட்டிலேயே கட்டமைத்துக் கொடுக்கும் திட்டத்துடனே சைனா மொபைல் இந்தியாவில் இறங்க உள்ளது.
கிளவுட் சேவை
சைனா மொபைல் தன் நாட்டில் கிளவுட் சேவையில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்காக முதலீடு செய்ய வாய்ப்புகளைத் தேடி வருகிறது.
இதேபோன்ற திட்டத்தைத் தான் சிங்கப்பூர் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான சிங்டெல் ஏர்டெல் நிறுவனத்தில் செய்ய ஆலோசனை நடத்த திட்டமிட்டது.
ஜியோ
சைனா மொபைல், இத்திட்டத்திற்காக ஏன் ஜியோ நிறுவனத்தை அணுகவில்லை என இதுவரை தெரியவில்லை. மேலும் ஏர்டெல், ஐடியா - வோடபோன் நிறுவனத்தில் சைனை மொபைல் முதலீடு செய்தால் மிகப்பெரிய அளவிலான கிளவுட் வர்த்தகத்தை இந்நிறுவனங்கள் பெறும். இது ஜியோவிற்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.