சீன மக்கள் தொடர்ந்து அரசின் அடக்குமுறையில் இருந்து வெறுப்படைந்த நிலையில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் அதிகளவிலான போராட்டம் வெடித்து வருகிறது.
சீனாவில் மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதை வாங்க வேண்டும், எதை நம்ப வேண்டும், எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சமூக வலைத்தளம் வாயிலாகவும், அரசின் நூதனமான உத்தரவுகள் வாயிலாகவும் அந்நாட்டு அரசு மக்களைத் திசை திருப்பி வருகிறது.
சீன மக்கள் போராட்டம்
இந்த நிலையில் சீனாவின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாலைகளிலும், பொது இடங்களிலும் கோவிட் கட்டுப்பாடுகளை நீக்கவும், மக்களை இயல்பு வாழ்க்கையை வாழ விடவும், சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்கள் உடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இணையம் வழியாகப் போராட்டம்
களத்தில் இருந்து போராடும் மக்களைக் காட்டிலும் இணையம் வழியாகப் போராடுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகம், அதேபோல் இணையத்தின் சக்தியும் அதிகம் என்பதால் சீன அரசு நூதனமான முறையில் மக்களைத் திசை திருப்ப முயன்று உள்ளது.
சீன அரசு செய்த வேலை
இந்த முறை சீன அரசின் செயல்பாடுகளைச் சீன மக்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த காரணத்தால் மக்கள் உஷாராகியுள்ளனர். சீன அரசு செய்த வேலை என்ன தெரியுமா..?
சமுக வலைத்தளம்
சீனாவில் அரசுக்கு எதிராகவும், ஜி ஜின்பிங் அரசுக்கு எதிராகவும் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில், டிவிட்டரில் இந்தப் போராட்டம் குறித்த பதிவுகள் சில மணி நேரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாலியல் தொடர்பான பதிவுகள்
இதைச் சரி செய்யச் சீன அரசு சார்பில் இயங்கி வரும் டிவிட்டர் anti-propaganda team முலம் மக்களைத் திசை திருப்பும் வகையில் பதிவுகளை அதிகளவில் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் போராட்டம் நடக்கும் ஊர் அல்லது பகுதி குறித்து டிவிட்டரில் தேடினால் 50 சதவீத பாலியல் தொடர்பான பதிவுகளும், 50 சதவீதம் போராட்டம் குறித்த பதவிகள் வரும் வகையில் டிவிட்டர் மாற்றியது.
1989 மக்கள் போராட்டம்
இந்தப் போராட்டம் 1989ல் நடந்த மக்கள் போராட்டத்திற்குப் பின் நடந்த பெரும் போராட்டமாக உள்ளது, சமீபத்தில் சீன வங்கிகள் மக்களின் பணத்தை எடுக்கத் தடை விதிக்கும் போதும் மக்கள் போராட்டம் நடத்தினர், அதற்கு முன்பு சீனா அரசு ஹாங்காங்-ஐ தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்த போது பெரும் மக்கள் போராட்டத்தைச் சீன அரசு எதிர்கொண்டது.
போலி கணக்குகள்
சீனா அரசு சார்பாக இயங்கி வரும் அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பல ஆயிரம் போலி கணக்குகள் பல மாதங்களாக இன்ஆக்டிவ் ஆக இருந்த நிலையில் தற்போது மக்கள் போராட்டம் வெடித்த பின்பு இந்தப் போலி கணக்கில் இருந்து எஸ்கார்ட் சேவை, பாலியல் சேவைகள் வழங்குவது குறித்து ஊர், இடம் பெயருடன் இந்தச் சீன மொழி கணக்கில் இருந்து பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
தேடல்
இதனால் சீன மக்களோ அல்லது உலக நாடுகளில் இருந்து போராட்டம் குறித்தோ அல்லது போராட்டம் நடக்கும் பகுதியை தேடினால் போராட்டத்தைத் தவிரத் தேவையில்லாத பதிவுகள் தான் அதிகமாக வருகிறது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்சார்
இந்த மோசமான நடவடிக்கை மூலம் சீனா அரசு போராட்டம் குறித்த பதிவுகளைச் சென்சார் செய்வது ஒரு பக்கம் நடந்தாலும், இந்தப் பாலியல் பதிவுகள் மூலம் திசை திருப்பியுள்ளது. சீனா அரசு பல முறை இதுபோன்று செய்துள்ளது. குறிப்பாக ஹேஷ்டேக்-ஐ தடை செய்வது, குறிப்பிட்ட வார்த்தையைக் கொண்டு பதிவிட முடியாமல் செய்வது போன்றவற்றை வெய்போ தளத்தில் செய்வது சீனா வழக்கமாகக் கொண்டு உள்ளது.
உதாரணம்
உதாரணமாகச் சீனா அரசு தனது உள்நாட்டு சமூக வலைத்தளத்தில் Liangma River, Urumqi Road ஆகியவற்றைச் சென்சார் செய்து அதைச் சார்ந்த பதிவுகளைத் தடை செய்துள்ளது. சீனாவில் தற்போது பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடக்கும் இடம் இது தான்.