இந்தியா என்கிற மாபெரும் துணை கண்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பல விதமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாறுபட்ட கலாச்சாரம் இருக்கிறது.
எல்லா தரப்பு மக்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியா என்கிற நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது எல்லோரும் ஒன்று கூடி எதிரியை எதிர்க்கிறார்கள்.
இப்போது சீனாவை அப்படித் தான் இந்திய மக்கள், தங்கள் உள்ளத்தில் இருந்து எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சரி இந்தியாவில் சீனாவுக்கு என்ன வர்த்தகம் & வியாபாரங்கள் இருக்கின்றன. அது எவ்வளவு பெரிது..? வாருங்கள் பார்ப்போம்.
ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து, சீனாவுக்கு கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் 13.3 பில்லியன் டாலருக்குத் தான் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. 2018 - 19 நிதி ஆண்டில் கொஞ்சம் அதிகரித்து 16.7 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் இது 5 சதவிகிதம் தான்.
சீன இறக்குமதி
ஆனால் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அளவு மிகப் பெரியது. 2017 - 18 நிதி ஆண்டில் 76.3 பில்லியன் டாலருக்கு மேல் இறக்குமதி செய்து இருக்கிறோம். 2018 - 19 நிதி ஆண்டில் 70.3 பில்லியன் டாலர் இறக்குமதி செய்து இருக்கிறோம். இது இந்தியாவின் ஒட்டு மொத்த இறக்குமதியில் 13.6 % என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன ஏற்றுமதி செய்கிறோம்
இந்தியா, சீனாவுக்கு பருத்தி, யார்ன், ஆர்கானிக் ரசாயனம், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள், துணிகள்... போன்றவைகளைத் தான் அனுப்புகிறோம். ஆனால் சீனாவில் இருந்து நாம் dஎக்னாலஜி & மருத்துவம் சார்ந்து இறக்குமதி செய்கிறோம். நாம் செய்வது எல்லாம் பெரிய சமாச்சாரங்கள். எலெக்ட்ரிக் சாதனங்கள், அணு உலை ரியாக்டர்கள், பாய்லர்கள், சோலார் சாதனங்கள், இந்திய பார்மா துறைக்குத் தேவையான முக்கிய மருந்துகள் (active pharmaceutical ingredients) போன்றவைகள் இறக்குமதி செய்கிறோம்.
வர்த்தகப் பற்றாக்குறை
சுருக்கமாக இந்தியா, சீனாவிடம் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது. மிகக் குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது. இதனால், இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. ஆக ஏற்றுமதி விவகாரத்தில் சீனாவுக்கு தான், இந்தியா சந்தையாக இருக்கிறதே ஒழிய, சீனாவில், இந்தியாவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி வியாபாரம் இல்லை.
முதலீடு
இந்தியாவின் டெக்னாலஜி துறையில் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவின் முன்னணி யுனிகார்ன் (1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட கம்பெனி) இந்திய ஸ்டார்ட் அப் கம்பெனிகளில், 3-ல் 2 கம்பெனிகள், சீன கம்பெனிகளிடம் இருந்து ஃபண்டிங் பெற்றவைகள் தான். இதை FDI இண்டலிஜென்ஸ் என்கிற நிறுவனம் உறுதி செய்கிறது.
முன்னணி ஸ்டார்ட் அப் கம்பெனிகள்
2018-ம் ஆண்டு அலிபாபா 216 மில்லியன் டாலரை பிக் பாஸ்கெட்டில் முதலீடு செய்தது. 210 மில்லியன் டாலரை சொமேட்டோவில் முதலீடு செய்தது. 2017-ல் டென்செண்ட் 400 மில்லியன் டாலரை ஓலாவிலும், 700 மில்லியன் டாலரை ஃப்ளிப்கார்ட்டிலும் முதலீடு செய்தது. பேடிஎம் நிறுவனத்தில் அதிகம் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகளில் அலிபாபவும் ஒன்று. புதிய கல்வி ஸ்டார்ட் அப் கம்பெனியான பைஜூவில், டென்செண்ட் முதலீடு செய்து இருக்கிறார்கள். இப்படி சீனாவின் கால் தடம், இந்தியாவின் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் அழுத்தமாக பதித்து இருக்கிறது.
ஒரே நாளில் மாறாது
இந்தியா சீனா பிரச்சனை வந்த பின், இப்போது, சீனாவிடம் இருந்து வாங்கும் பொருட்களை எல்லாம் இந்தியா தொடர்ந்து வாங்கலாமா என யோசிக்கும். ஆனால் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகம் எதுவும் ஒரே நாளில் மாறி விடாது என்கிறார் வர்த்தக பொருளாதார நிபுணர் கீதாஞ்சலி நட்ராஜ்.
சீனாவை சார்ந்து இருப்பது
இனி வரும் காலத்தில், இந்தியா, சீனா உட்பட எந்த ஒரு நாட்டையும், அதிகம் சார்ந்து இருப்பதைக் குறைத்துக் கொள்ளும் என்கிறார் வர்த்தக நிபுணர் & முன்னாள் மத்திய வணிக அமைச்சக ஆலோசகர் மற்றும் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பிஸ்வஜித் தர் (Biswajit Dhar).