சமீப காலமாக இந்தியாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி வருகிறது, குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் உடன் போட்டிப்போட முடியாமல் தொடர் நஷ்டத்தில் மாட்டிக்கொண்டு இழப்பைச் சமாளிக்க முடியாமல் வெளியேறி வருகிறது.
ஆனால் சீன நிறுவனம் ஒன்று இந்தியாவிற்கு வர முயற்சி செய்து தோல்வி அடைந்து நீங்களும் வேண்டாம், உங்க பிஸ்னஸ்-ம் வேண்டாம்.. என்ற முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஆட்டோமொபைல்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்ட காலமாக வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வந்த நிலையில், பிஎஸ் 6 மாற்றத்திற்குப் பின்பு இந்தியாவில் வந்த கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனத்தின் வெற்றி என்பது பலருக்கும் வியப்பை அளித்தது.
கிரேட் வால் மோட்டார்ஸ்
இதைப் பார்த்து இந்தியாவிற்கு வர துடித்த சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ், எப்படியாவது இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்த தாயாரானது. ஆனால் இதே நேரத்தில் தான் இந்திய சீன எல்லை பிரச்சனை வெடித்தது, மத்திய அரசு சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்தத் துவங்கியது.
ஜெனரல் மோட்டார்ஸ்
இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்க திட்டமிட்ட கிரேல்வால் மோட்டார்ஸ் உற்பத்தி செய்வதற்காக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையைக் கைப்பற்ற 2020ல் ஒப்பந்தம் செய்தது. இதேவேளையில் இத்தொழிற்சாலை ஊழியர்கள் வேலை இழக்கும் காரணத்தால் கூடுதலான விடுப்பு தொகையைக் கேட்டு வழக்குத் தொடுத்தனர்.
2.5 வருட முயற்சி
இந்த வழக்கும், இத்தொழிற்சாலையைக் கைப்பற்ற மத்திய அரசின் ஒப்புதலும் கிடைக்காத நிலையில் சுமார் 2.5 வருடத்திற்கு இந்தியாவிற்கு வரும் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்ததோடு, இந்தியாவில் இந்நிறுவனம் வைத்திருந்த அலுவலகத்தை மூடியும், இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த 8-10 ஊழியர்களைப் பணிநீக்கமும் செய்துள்ளது.
3 மாதம் சம்பளம்
மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதம் சம்பளத்தை விடுப்புத் தொகையாக அளித்தது. இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்க Changan, Haima மற்றும் Chery ஆகிய நிறுவனங்கள் முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில் தற்போது கடைசியாகக் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் தோல்வியைச் சந்தித்து இந்திய வர்த்தக முயற்சிகளைக் கைவிட்டுள்ளது.
டெஸ்லா, போர்டு
இதேபோலத் தான் அரசின் சலுகைகள் கிடைக்காமல் அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா முயற்சிகள் தோல்வி அடைந்த காரணத்தால் வெளியேறியது. சமீபத்தில் போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து குஜராத் சனந் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.