பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை ஏற்கனவே அந்நாடு அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தால் ஆப்பிரிக்க, வளைகுடா நாடுகளின் வாழ்வாதாரத்தையே அசைத்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.
அந்த வகையில் எத்தியோப்பியாவை பாலைவன வெட்டுக்கிளிகளின் தலைநகரம் என்றே கூறலாம். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து சூடான் சவுதி அரேபியா, ஈரான் வழியாக பாகிஸ்தானில் பெருத்த சேதத்தை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இருபது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது பாகிஸ்தான். ஆனால் பெரும்பாலும் குளிர்காலத்தில் பயிர்கள் நல்ல விளைச்சல் பருவத்தில் இருக்கும்போது கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்து எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டு போய்விடும். ஆனால் அந்த சமயத்தில் பெரிய இழப்பாக இருந்ததில்லை. மேலும் அப்படி குளிர்காலத்தில் வரும் வெட்டுக்கிளிகள் சில காலம் கழித்து ஈரானுக்குச் சென்று விடுவதுண்டு, ஆனால் இந்த முறை குறைந்த வெப்பநிலை காரணமாக அவை இன்னும் பாகிஸ்தானிலேயே தங்கியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாகவும் அமைந்துள்ளதாக பாகிஸ்தானின் விவசாயப் பயிர் பாதுகாப்புத்துறையும் பெரும் அச்சம் தெரிவித்துள்ளது.
இதற்காக முன்னரே பயிர்களை அழிக்கும் பூச்சிகளைச் சமாளிக்க 730 கோடி ரூபாய் தேவைப்படும் ஒரு தேசிய செயல் திட்டத்திற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்காக பிராந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் பயிர்களை உண்ணும் பூச்சிகளை எதிர்த்து போராட சீனா வாத்து படைப்பிரிவினை பாகிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகளை எதிர்த்து போராடுவதற்காக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் 1,00,000 வாத்துகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாத்துகள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு 200 வெட்டுக்கிளிகளை உண்ணும் திறன் உடையதாம்.
இதே பாகிஸ்தான் அரசாங்கம் அதன் குடிமக்களை வெட்டுகிளிகளையும் சாப்பிட வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் எவ்வளவு தீவிரமானது என்பதை அறிய ஆப்பிரிக்காவை பாருங்கள். இந்த வெட்டுகிளிகளை எதிர்த்துத் போராடுவதற்காக 900 கோடி ரூபாய்க்கு மேல் (128 மில்லியன் டாலர்) செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.