நீண்ட காலமாகவே சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகங்கள் அனைவரின் கண்களிலும் தென்படும்படி பகிரப்பட்டு வருகிறது, தியேட்டர்கள், சுவர்கள் போன்றவற்றிலும் இது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஒரே ஒரு நாட்டில் சிகரெட் பழக்கம் அவர்களுடைய கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. ஆம், சீனாவில் சிகரெட் பயன்பாடு பிற நாடுகளை விட சற்று அதிகம்.
சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியானது. அதில் உலகளவில் புகையிலை பயன்படுத்துவதில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. உலகளவில் புகைக்கப்படும் சிகரெட்டுகளில் சீனர்கள் மட்டும் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவை புகைத்து தள்ளுகிறார்களாம்.
சீனாவின் சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன் வெளியிட்ட இந்த அறிக்கையில், அங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.7 ட்ரில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. உலகளவில் இந்த எண்ணிக்கை உற்பத்தியில் பாதி என்றே சொல்லலாம்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், உலகில் இரண்டு பேர் சிகரெட் பற்ற வைக்கின்றனர் என்றால் அதில் ஒன்று கண்டிப்பாக சீனாவில் பற்றவைக்கப்படுகிறதாம். மதுப்பழக்கம், சிகரெட் போன்றவற்றால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் சீனாவில் மட்டும் சிகரெட் பயன்பாடு குறையவே இல்லை. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? அங்கு புகையிலை உற்பத்தி மற்றும் விநியோகம் எல்லாவற்றையும் அரசே நேரடியாக கண்காணிக்கிறது. இதனால் சிகரெட் மிகவும் விலை குறைவாகவும், சாமானியர்கள் எளிதில் வாங்கும் வகையிலும் கிடைக்கிறது.
இந்தியாவில் சிகரெட் பழக்கங்களால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக புற்றுநோய் பற்றிய கோரமான படங்கள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் சீனாவில் அப்படி இல்லை. அங்கு கலர் கலர் பாக்கெட்டுகளில், பாரம்பரிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவை பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கும். மேலும் உடல் நலம் பற்றிய வாசகங்கள் ஒரே ஒரு வரியில் சிறியதாகவே கொடுக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற விஷயங்களால் சிகரெட் பிடிப்பது அங்கு ஒரு நாகரிகமான விஷயமாகவும், ஒரு சாதாரண பழக்கமாகவும் மாறி வருகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஒட்டுமொத்த சிகரெட் பயன்பாட்டை வைத்து பார்க்கும் போது சீனா தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் ஓசியானியாவில் உள்ள ஒரு தீவு நாடான நௌருவில் 45 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர், அதேபோல தென்கிழக்கு ஆசியா மற்றும் பால்கன் பகுதிகளிலும் அதிகம் புகைபிடிக்கும் நபர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் பெண்களை விட ஆண்கள் தான் புகை பிடிப்பதில் முதலிடத்தில் இருக்கின்றனர்.
2025-ஆம் ஆண்டு நிலவரப்படி புகையிலை பயன்படுத்துவதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது 70 லட்சத்திற்கும் அதிகமானோர் புகையிலையினால் உயிரிழக்கின்றனராம். இனியாவது சீனா இறப்புகளை தடுப்பதற்காக சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் அங்குள்ள மக்களுக்கு அது உதவியாக இருக்கும். அதற்கு அங்குள்ள அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications