கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைகள் மோசமான நிலையை அடைந்த நிலையிலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை பட்டையைக் கிளப்பியுள்ளது.
ஆன்லைன் கல்வி, கேமிங்கி, டைம்பாஸ் என ரக ரகமான காரணங்களுக்காக இந்திய மக்கள் வல்லரசு நாடுகளைக் காட்டிலும் அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் உச்சத்தில் இருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளே செப்டம்பர் காலாண்டு விற்பனையில் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்ரோன் விற்பனை சுமார் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இக்காலாண்டில் மட்டும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சுமார் 5.43 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்காக அனுப்பியுள்ளது.
விற்பனை அமோகம்
செப்டம்பர் காலாண்டில் சீனா, அமெரிக்காவைப் போலவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செபம்டபர் மாத துவக்கத்தில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் விற்பனை ஆன காரணத்தால் ஒரு இலக்கு வளர்ச்சி அடையும் IDC ஆய்வு நிறுவனம் கணித்திருந்தது.
ஆனால் கணிப்புகளை உடைத்து இந்தியச் சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை 17 சதவீதம் வளர்ச்சி அடைந்து அசத்தியுள்ளது.
பண்டிகை விற்பனை
இந்நிலையில் நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை காரணமாக இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதிகளவிலான ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து ஸ்டாக் வைத்துள்ளது.
இந்தப் பண்டிகை காலத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வரலாற்று உச்சத்தை அடையும் என அனைத்து தரப்புகளாலும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சியோமி தாறுமாறான வளர்ச்சி
இந்தச் செப்டம்பர் காலாண்டில் சியோமி நிறுவனம் சுமார் 25 சதவீத விற்பனை சந்தையைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது. சீனா எதிர்ப்புகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட சியோமி மக்கள் மத்தியில் இன்னமும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிறுவனத்தின் பட்ஜெட் விலை போன்கள் மக்களின் பொருளாதார நிலைக்கு மிகவும் ஏற்றதாக உள்ள காரணத்தால் சியோமி அதிகளவிலான போன்களை விற்று தொடர்ந்து புதிய ஆர்டர்களைக் கைப்பற்றி வருகிறது.
சாம்சங் டூ ஓப்போ
செப்டம்பர் காலாண்டு விற்பனையில் சியோமி முதல் இடத்தைப் பிடித்த நிலையில் சாம்சங் 22.3 சதவீத சந்தையைக் கைப்பற்றி 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து விவோ 16.7 சதவீத சந்தை, ரியல்மி 14.7 சதவீத சந்தை, ஓப்போ 11.3 சதவீத சந்தை என அடுத்தடுத்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.
பியூச்சர் போன்
செப்டம்பர் காலாண்டில் சுமார் 2.5 கோடி பியூச்சர் போன்கள் விற்பனை சந்தைக்குச் சென்றுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 30 சதவீதம் சரிவு.
இதன் மூலம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது, ஆனாலும் இந்திய டெலிகாம் சந்தையில் பியூச்சர் போன் வர்த்தகம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.