கடந்த ஜூன் 2020-ல் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்த பின், இந்தியா முழுக்கவே, சீன புறக்கணிப்பு, என்கிற உணர்ச்சி, பிரவாகம் எடுத்தது.
மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதத்தில், மத்திய அரசு நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி ரயில்வே ஒப்பந்தங்கள் வரை பலவற்றையும் சினாவுக்குக் கொடுக்கமாட்டேன் என்றது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் சோலார் உபகரணங்களுக்கு எல்லாம் கூடுதல் வரி விதித்தது. இதை எல்லாம் விட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
தவறான புரிதல்
இத்தனை கடுமையான நடவடிக்கைகள் மற்றும் மக்கள் உணர்வு எழுச்சிக்குப் பின், எப்படியும் இனி சீனா எல்லாம் அவ்வளவு எளிதாக இந்திய சந்தைகளில் வர முடியாது என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் சீன பொருட்கள் இன்னும் இந்திய சந்தையை விட்டு வெளியே கூட போகவில்லை என்பதை சில செய்திகள் உறுதி செய்கின்றன.
ஆன்லைன் சிறப்பு விற்பனை
கடந்த ஆகஸ்ட் 6 & 7 தேதிகளில் அமேசான் கம்பெனியின் ப்ரைம் டே விற்பனை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 8 - 11 தேதி வரை ஃப்ரீடம் சேல் நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல ஃப்ளிப்கார்ட் கம்பெனியும் சுதந்திர தின சிறப்பு விற்பனையை (Flipkart Independence Day sale) ஆகஸ்ட் 6 - 10 தேதிகளில் நடத்தியது.
தூள் கிளப்பிய சீன விற்பனை
இத்தனை நாள், சீன பொருட்கள் புறக்கணிப்புக்கு அதிக ஆதரவு இருப்பது போலத் தான் தெரிந்தது. ஆனால் எதார்த்தத்தில், மக்கள் தங்களுக்கு சரிப்பட்டு வரும் விலையில் யார் பொருள் கொடுக்கிறார்கள் என்று தான் பார்த்து இருக்கிறார்களே ஒழிய, அந்த பொருளை சீனா கொடுக்கிறதா, இந்தியா கொடுக்கிறதா, ஜப்பான் கொடுக்கிறதா எனப் பார்க்கவில்லை. இந்த ஆன்லைன் விற்பனையில் சீன பொருட்களின் விற்பனை கலை கட்டி இருப்பதே அதற்கு சாட்சி.
ஒன்ப்ளஸ் உதாரணம்
ஒன்ப்ளஸ் நார்ட் (OnePlus Nord) ஸ்மார்ட்போன்களை அமேசானில் தான் விற்றார்கள். அமேசான் ப்ரைம் டே விற்பனையில் (ஆக 6 - 7), அதிகம் விற்பனை ஆன ஸ்மார்ட்ஃபோன் இது தானாம். இப்போது கூட அமேசானில் இந்த OnePlus Nord ஸ்மார்ட்ஃபோன் ஸ்டாக் இல்லை என்கிறது அமேசான் வலைதளம். இதற்கே அதிர்ச்சி ஆனால் எப்படி? இன்னும் இருக்கிறது.
ரியல் மீ இந்தியா (Realme India)
இந்த ரியல் மீ-யும் ஒரு சீன கம்பெனி தான். இந்த கம்பெனியின் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை இந்த இரண்டு ப்ரொமோஷன் விற்பனையில் அதிகரித்து இருக்கிறதாம். வீட்டில் இருந்தே வேலை பார்க்க பயன்படும் எல்லாம் பொருட்களும் நன்றாக விற்பனை ஆகி இருக்கிறதாம். wired earphone-களில் ரியல் மீ கம்பெனியின் wired earphone அதிகம் விற்பனை ஆகி இருக்கிறதாம்.
400 கோடிக்கு வியாபாரம்
ஒட்டுமொத்தமாக 400 கோடி ரூபாய் gross merchandise value (GMV)-க்கு வியாபாரம் செய்து இருக்கலாம் என கம்பெனி தரப்பில் இருந்தே சொல்லி இருக்கிறார்கள். இதை விட இன்னொரு ஆச்சர்யமான தகவல் நமக்குக் காத்திருக்கிறது. அந்த ஷாக்கை கொடுக்க இருக்கும் நிறுவனம் சியாமி.
15 நொடியில் காலி
வழக்கம் போல சியாமி (Xiaomi) ஸ்மார்ட்ஃபோன்களுக்கு, இந்த முறையும் முரட்டு வரவேற்பு இருந்து இருக்கிறது. சியாமியின் 4 ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்டாக் காலி ஆகிவிட்டதாம். ஒரு சில ஸ்மார்ட்ஃபோன் மாடல்கள், விற்பனை தொடங்கி 15 நொடியில் காலியாகிவிட்டது என்கிறார் சியாமி இந்தியாவின் தலைவர் மனு குமார்.
சீன கம்பெனிகள் கையில் இந்தியாவின் சந்தை
Canalys என்கிற நிறுவனத்தின் கணிப்புப் படி, ஜூன் 2020 காலாண்டில் சியாமி தான் 30.9 % இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையை தன் வசம் வைத்திருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து விவோ 21.3 %, ஒப்போ 12.9 %, ரியல் மீ 10 % என இந்த பெரிய சீன பிராண்டுகள் மட்டும், இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் சுமாராக 73 சதவிகிதத்தை கையில் வைத்திருக்கிறார்களாம்.
டிவியிலும் ஆதிக்கம்
டிசிஎல் (TCL) கம்பெனியின் 4K & QLED டிவி மாடல்கள் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கிய முதல் நாளுக்குள்ளேயே விற்பனை ஆகிவிட்டதாம். டிசிஎல் கம்பெனியின் ஜூன் விற்பனை கடந்த ஆண்டை விட 47 % அதிகரித்து இருக்கிறதாம். அதே போல ஜூலை மாதத்திலும் கடந்த ஆண்டை விட சுமார் 40% வரை விற்பனை அதிகரித்து இருக்கிறதாம். 2020-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், 20 % விற்பனை அதிகரித்து இருக்கிறதாம். இதில் சீன புறக்கணிப்பு எங்கு இருக்கிறது என்று தான் தெரியவில்லை.
சீன கம்பெனியின் CEO
இந்திய வாடிக்கையாளர்களுக்கு, லேட்டஸ்ட் டெக்னாலஜி வசதி கொண்ட சாதனங்கள் சரியான விலைக்குக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் தான் இது மாதிரியான பொருட்கள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்று இருக்கின்றன என்கிறார். இவர் சீன பொருட்களைத் தான் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் போலிருக்கிறது.
கடைகளில் கூட வழக்கம் போல விற்பனை
ஆன்லயனை விடுங்கள், வழக்கம் போல கடைகளில் கூட சீன பொருட்களுக்கான விற்பனை வழக்கம் போலத் தான் இருக்கிறதாம். டெல்லி நகரத்தின் சாந்தினி செளக், நேரு ப்ளேஸ், மும்பை நகரத்தின் லாமிங்டன் ரோட் எல்லாம் நம் சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் போல எலெக்ட்ரானிக்ஸ்காக என்றே இருக்கும் ஏரியாக்கள். இங்கு கூட சீன பொருட்கள் வழக்கம் போல விற்பனை ஆகிறது என பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறது. சொல்லப் போனால் சீன பொருட்கள் இறக்குமதி சிக்கல்களால் வியாபாரம் அடி வாங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தொடரும் சீன வியாபாரம்
சீன பொருட்களின் சப்ளை அதிகமாக இருந்தால், சீன பொருட்களின் விற்பனையும் அதிகமாக இருக்கும் என்று கடைக்காரர்களும், துறை சார்ந்தவர்களும் சொல்கிறார்களாம். ஆக ஒட்டு மொத்தத்தில் சீன புறக்கணிப்பு இந்த எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு பொருந்தவில்லை. மக்கள் வழக்கம் போல சீன பொருட்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.