உலகில் தயார் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒரு நல்ல சந்தையாக இந்தியா மாறிக் கொண்டு இருக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகள் தாண்டி இப்போது நிதி சார்ந்த முதலீடுகள் மற்றும் இன்சூரன்ஸ் போன்றவைகளும் இந்தியாவில் தலை எடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
இதில் இன்சூரன்ஸ் துறை குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியைக் காட்டி வருகின்றன. அப்படி வளர்ந்து வரும் இந்தியாவின் இன்சூரன்ஸ் துறையில் கால் பதிக்க சீன நிறுவனங்களும் களம் இறங்கத் தொடங்கி இருக்கின்றன.
அதற்கு உதாரணமாக, சீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம், இந்தியாவின் பாலிசி பசார் என்கிற நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறார்கள்.
பாலிசி பசார்
இந்தியாவில் இருக்கும் இன்சூரன்ஸ் துறையை மாற்றிக் கொண்டு இருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த பாலிசி பசார் நிறுவன வலைதளத்தில், இந்தியாவின் பல நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசியை ஒப்பிட்டு, நமக்கு தேவையான நல்ல பாலிசிகளை, ஆன்லைனிலேயே எடுத்துக் கொள்ளலாம். லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் என எல்லா இன்சூரன்ஸையும் இந்த வலைதளத்திலேயே எடுத்துக் கொள்ளலாம்.
மதிப்பீடு
தற்போதைக்கு இந்தியாவின் பாலிசி பசார் நிறுவனத்தின் மதிப்பீடு சுமாராக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். எனவே சுமார் 150 மில்லியன் டாலரில் பாலிசி பசாரின் 10 சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறார்களாம். இந்த டீல் கடந்த வாரம் தான் கையெழுத்து ஆகி இருக்கிறதாம். இந்த டீலைப் பற்றிய முறையான செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.
டென்செண்ட்
சீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் வீசேட் என்கிற செயலியை நடத்திக் கொண்டு இருக்கிறது. டென்செண்ட் நிறுவனம் இந்தியாவின் ஓலா, பைஜூ, ஸ்விக்கி என பல துறை சார்ந்த பல ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாலிசி பசார் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
நிதி சேவைகள்
இப்படி இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒரு கண் வைத்திருக்கும் டென்செண்ட் நிறுவனம் தற்போது, இந்தியாவின் டெக்னாலஜி சார்ந்த நிதி சேவை ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் தான் நியோ சொல்யூஷன்ஸ் என்கிற டிஜிட்டல் பேங்கிங் சேவை நிறுவனத்தில் முதலீடு செய்தது. இப்போது பாலிசி பசாரில் முதலீடு செய்து இருக்கிறது.
இன்சூரன்ஸ்
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 130 கோடி பேரில் சுமாராக 5 சதவிகிதம் பேருக்கு முறையாக லைஃப் இன்சூரன்ஸ் இருந்தாலே பெரிய விஷயம். நம் இந்தியாவில், கட்டாயத்தின் பெயரில் தான் வாகன இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். எனவே இன்னும் இந்தியாவில் இன்சூரன்ஸ் வியாபாரம் செய்து கல்லா கட்ட நிறைய இடம் இருக்கிறது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் சீன நிறுவனம், இந்தியாவுக்கு வருகிறது போல.
யார் வந்தால் என்ன, தரமான பொருட்கள் அல்லது சேவையை நியாயமான விலைக்கு கொடுத்தால் யாராக இருந்தாலும் ஜெயிக்கலாமே..!