இந்தியா உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையும், பல நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் இளைய தலைமுறை அதிகம் கொண்ட நாடு. இதைவிட முதலீட்டாளர்களுக்கு வேறு என்ன வேண்டும். இந்தக் காரணங்களை மையமாக வைத்துத் தான் அமெரிக்க, ஐரோப்பிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.
ஆனால் இப்போது புதிதாகச் சீனா முதலீட்டாளர்கள் திடீரென இந்தியாவில் முதலீடு செய்யப் படையெடுத்து வருகின்றனர். என்ன காரணம் தெரியுமா..?
சீனா பொருளாதாரம்
சீனாவில் தற்போது பல்வேறு காரணங்களுக்காகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவு அதிகளவிலான வரி விதிக்கப்பட்ட நிலையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியது. இந்நிலையில் தற்போது கரோனாவைரஸ் பாதிப்புச் சீனாவில் உணவு சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இந்திய சந்தை
சீனாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியின் இக்கட்டான சூழ்நிலையில் சீனாவில் புதிய வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்காத நிலையில், சீனா முதலீட்டாளர்கள் தற்போது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலும், உற்பத்தித் துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டு இந்தியாவிற்குப் படையெடுத்து வருகிறது.
சீனா முதலீட்டாளர்கள்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் பல சீன பெரும் நிறுவனங்கள், வென்சர் பண்ட்ஸ், பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் இந்தியா தான் அடுத்த 10 வருடத்தில் ஆசியாவின் வர்த்தகச் சக்கரமாக இருக்கப் போகிறது. இதை உணர்ந்த சீன முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முக்கிய முதலீட்டாளர்கள்
Boyu Capital, Horizons China, Sinovation Ventures, Legend Capital, ZhenFund, XVC Capital, Integrated Capital ஆகிய முதலீட்டு நிறுவனங்களும், Jingdong, Kunlun, Kuaishou, Ping An மற்றும் YY.com ஆகிய கார்பரேட் முதலீட்டாளர்களும் தற்போது இந்தியாவில் முதலீடு செய்யச் சந்தையை ஆய்வு செய்ய ஆய்வாளர்களை நியமித்து உள்ளனர்.
பழைய முதலீட்டாளர்கள்
இந்தியாவில் சீனா முதலீட்டாளர்கள் இப்போது தான் முதலீடு செய்கிறார்களா..? என்று நீங்கள் கேட்டால் நிச்சயம் இல்லை. இந்தியாவில் ஏற்கனவே அலிபே, டிடி, சியோமி, டென்சென்ட் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்பது தான் சிறப்பு.
மாற்றம்
சீன முதலீட்டாளர்கள் 2019ஆம் ஆண்டே அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர். 2018இல் இந்தியச் சந்தையில் வெறும் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிலையில் 2019இல் சுமார் 3.9 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 100 சதவீத அதிகப் பணத்தை இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
தற்போது இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் சீன முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இந்த முதலீட்டு அளவு 2020இல் 6 முதல் 8 பில்லியன் டாலர் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.