சீனா, தன்னை ஒரு உலக வல்லரசாக உருவாக்கிக் கொள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே வருகிறது. வளரும் நாடுகளுக்கு கடன் கொடுப்பது, பெல்ட் அண்ட் ரோட் திட்டம் என பல விஸ்வரூப திட்டங்கள் மூலம், உலக அரங்கில் தன் நிலையை விஸ்தரித்துக் கொண்டே போகிறது சீனா.
கடந்த 2018-ம் ஆண்டில், அமெரிக்கா, சீன பொருட்கள் மீது வரி விதித்தது. அதற்கு கொஞ்சம் கூட பயப்படாமல், அமெரிக்க பொருட்கள் மீது, சீன அரசு வரி விதித்தது. இந்த வர்த்தகப் போர் இன்று வரை ஒரு முடிவுக்கு வரவில்லை.
அதே போல கடந்த சில மாதங்களாக இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறது சீனா. தோக்லம், கல்வான், லடாக் தொடங்கி இன்று அருணாசலப் பிரதேசம் வரை பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
ஜூன் 2020 ராணுவ வீரர்கள் உயிர் தியாகம்
கடந்த ஜூன் 2020 காலத்தில், சீனாவின் தாக்குதலால், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நாடே கொந்தளித்தது. சீன புறக்கணிப்பு உணர்வு பலமாக அதிகரித்தது. இதனால் மத்திய அரசும், சீனாவுக்கு எதிராக பல அறிவிப்புகளை வெளியிட்டது. ரயில்வே ஒப்பந்தங்கள் தொடங்கி நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் வரை சீன கம்பெனிகளுக்கு கொடுக்கப்படாது என்றது மத்திய அரசு.
நடவடிக்கைகள்
23 ஜூன் 2020 அன்று, அரசின் இ சந்தையில் (Government E Marketplace) விற்கப்படும் பொருட்கள், எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது எனத் தெரியப்படுத்த வேண்டும் என்றது மத்திய வணிக அமைச்சகம்.
29 ஜூன் 2020 அன்று, 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய எலெக்ட்ரானிக்ஸ் & ஐடி அமைச்சகம்.
03 ஜூலை 2020 அன்று, மின்சார உபகரணங்களுக்கான இறக்குமதியை நிறுத்துவதாகச் சொன்னது மத்திய மின்சார அமைச்சகம்.
கடுமையான நடவடிக்கைகள்
29 ஜூலை 2020 அன்று, சோலார் செல் & பேனல்கள் உட்பட சீனாவில் இருந்து கணிசமாக இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் மீது ஆண்டி டம்பிங் வரி அல்லது பாதுகாப்பு வரி விதித்தது மத்திய நிதி அமைச்சகம்.
30 ஜூலை 2020 அன்று, டிவிகளை இறக்குமதி செய்ய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றது மத்திய வணிக அமைச்சகம். இந்திய டிவி சந்தையில் சுமார் 36 % டிவிக்கள் சீனா & தெற்காசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இறக்குமதி அதிகரிப்பு
இத்தனை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், இயற்கையாகவே இந்தியாவில் செய்யப்படும் சீன பொருட்களின் இறக்குமதி குறைந்து இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இந்தியாவில், சீன இறக்குமதிகள் குறையவில்லை, மாறாக அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் தரவுகள். இந்த 2020-ம் ஆண்டிலேயே, கடந்த ஜூலை 2020 மாதத்தில் தான், இந்தியா, சீனாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து இருப்பதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க்.
இறக்குமதி விவரங்கள்
கடந்த ஜூலை 2020-ல் 5.58 பில்லியன் டாலருக்கு இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்து இருக்கிறதாம். இது கடந்த ஜூன் 2020 மாதத்தில், இந்தியா செய்த 3.3 பில்லியன் டாலர் இறக்குமதியை விட அதிகம். அதே போல, இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் சுமார் 20 சதவிகித இறக்குமதி, சீனாவில் இருந்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடுகிறது ப்ளூம்பெர்க்.
சீன பொருட்களின் தேவை
ஆக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், இந்தியர்களுக்கு, சீன பொருட்களுக்கான தேவை இருப்பதாகத் தான் தெரிகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகள் சீன இறக்குமதிகளை பாதித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்த 2020 - 21 முழு நிதி ஆண்டு முடியும் போது, இந்திய அரசின் நடவடிக்கைகளால், சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் அளவு குறையலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.