இந்தியா மற்றும் சீனா அண்டை நாடுகளாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக இரண்டு நாடுகளுமே ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்கள் தான்.
இந்த போட்டிக்கு மத்தியில், கடந்த ஜூன் 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்களை சீனா தாக்கியது, பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
சீனாவின் தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது, நாடு முழுவதும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய அரசு தொடங்கி சாமானிய மக்கள் வரை சீன புறக்கணிப்பு முழக்கத்தை கையில் எடுத்தார்கள்.
மத்திய அரசு அதிரடி
அதன் விளைவாக, மத்திய அரசு நெடுஞ்சாலை திட்டங்களை சீன கம்பெனிகளுக்கு கொடுக்கமாட்டோம் என்றது. சீனாவின் மிகப் பெரிய 59 அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து சீனாவையே அலற விட்டார்கள். சமீபத்தில் இந்திய ரயில்வேஸில் கூட, சீன கம்பெனிக்கு கொடுத்து இருந்த ஒரு சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் திட்டத்தை ரத்து செய்தார்கள். இப்படி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் சாதனங்கள் தனி கவனம் பெறுகின்றன.
கூடுதல் வரி
சமீபத்தில் தான் மத்திய மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி துறையின் அமைச்சர் ஆர் கே சிங், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் உபகரணங்களுக்கு, ஆகஸ்ட் 2020-ல் இருந்து, கூடுதலாக 20 - 25 சதவிகிதம் வரி விதிக்கப்படலாம். அதைக் குறித்து ஆலோசித்துக் கொண்டு இருக்கிறோம் எனச் சொல்லி இருந்தார். அடுத்த ஆண்டில் இந்த கூடுதல் வரியை 40 சதவிகிதமாக உயர்த்தவும் அலோசித்து வருவதாகவும் சொன்னார்.
என்ன காரணம்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்தியா 71,000 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார சாதனங்களை இறக்குமதி செய்து இருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் இறக்குமதி செய்த மொத்த 71,000 கோடி ரூபாயில், 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிகள் சீனாவில் இருந்து வந்தவைகள். அதிலும் குறிப்பாக சோலார் இறக்குமதிகளில் 80 % சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகளாம்.
சீனா சார்பு
இந்தியா, சோலார் மின் சாதனங்களில், சீனாவைச் சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாகச் சொல்லி இருந்தார் மின்சாரத் துறை அமைச்சர் ஆர் கே சிங். மின்சாரத் துறை அமைச்சர் சொன்னது போல கூடுதல் வரி விதிப்பதை உறுதி செய்ததாகச் செய்திகள் வரவில்லை.
பாதுகாப்பு வரி (Safeguard Duty)
ஆனால், 2018-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பாதுகாப்பு வரியை (Safeguard Duty), சீன சோலார் இறக்குமதிகள் மீதி விதிக்க Directorate General of Trade Remedies - DGTR அமைப்பு, அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறது. 14.5 - 14.9 சதவிகிதம் வரை சீன சோலார் இறக்குமதிகள் மீது பாதுகாப்பு வரி விதிக்க பரிந்துரைத்து இருக்கிறது.
ஆறு மாதங்கள்
DGTR பரிந்துரையின் படி, ஜூலை 30 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் சாதனங்கள் மீது 14.9 % பாதுகாப்பு வரி விதிக்கப்படும். அதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சீன சோலார் இறக்குமதிகள் மீது 14.5 % பாதுகாப்பு வரி விதிக்கப்படும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அது என்ன பாதுகாப்பு வரி
கடந்த ஜூலை 2018-ல், மலிவான இறக்குமதிகளை இந்தியாவுக்குள் வரவிடாமல் தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், பாதுகாப்பு வரி (Safeguard Duty) விதித்தார்கள். முதல் வருடத்தில் 25 % வரி விதித்தார்கள். அதற்கு அடுத்த 6 மாத காலத்துக்கு 20 % வரியும், அதற்கு அடுத்த 6 மாத காலத்துக்கு 15 % வரியும் விதித்தார்கள்.
நீட்சி தான் 14.9% & 14.5%
அந்த (Safeguard Duty) பாதுகாப்பு வரியைத் தான், தற்போது DGTR அமைப்பு, 03 ஜூலை 2020க்குப் பின் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் சாதனங்களுக்கு 14.9 % மற்றும் 14.5 % வரி விதிக்க அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. ஆக இந்த பாதுகாப்பு வரி ஒன்றும் புதிய வரி கிடையாது.
சோலார் உற்பத்தியாளர்கள் ஆதரவு
DGTR அமைப்பின் இந்த பரிந்துரையை, இந்தியாவில் சோலார் மின் சாதனங்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் வரவேற்று இருக்கிறார்கள். அதோடு சோலார் இறக்குமதிகள் மீதான வரியை 15 %-ல் இருந்து 50%-ஆக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். அதோடு நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஒருவேளை அரசு இந்த வரிப் பரிந்துரையை ஏற்று வரி விதித்தால், அது சீனாவுக்கு வைக்கும் இன்னொரு பெரிய செக்காக இருக்கும் எனலாம்.