ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன் பயன்பாடும், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணத்தால் இத்துறை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டி உள்ளது.
இந்தப் போட்டியில் யார் முதல் இடத்தை பிடிப்பது என்பது சீனா, கொரியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் எப்போதும் இருக்கும், ஆனால் இந்த லாக்டவுன் காலத்தில் இந்தப் போட்டி மிகவும் அதிகமாகியுள்ளது என்றால் மிகையில்லை.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டில் முடங்கிய காரணத்தால் வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆன்லைன் கல்வி, வீட்டில் இருந்து வேலை, ஆன்லைன் வர்த்தகம் எனப் பல காரணத்திற்காக மக்கள் ஸ்மார்ட்போன் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் நிறுவனங்களும் அதிகளவிலான வர்த்தகம் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தை
ஸ்மார்ட்போன் சந்தையின் வர்த்தகம் தொடர்ந்து குறையாமல் இருந்த காரணத்தால் ஜூன் காலாண்டில் மிகப்பெரிய வர்த்தகம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆம் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தைப் பட்ஜெட் போன் தயாரிக்கும் நிறுவனமான சியோமி முந்தியுள்ளது.
சீன நிறுவனம்
ஏப்ரல் - ஜூன் 2021 காலாண்டில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் வர்த்தகம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வர்த்தகத்தில் பெரும் பகுதி சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி கைப்பற்றித் தற்போது உலகின் 2வது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சாம்சங் நிறுவனம்
கனலைசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி ஜூன் காலாண்டு முடிவில் சாம்சங் 15 சதவீத வர்த்தக வளர்ச்சியில் 19 சதவீத சந்தையைக் கைப்பற்றி உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
சியோமி மற்றும் ஆப்பிள்
இதைத் தொடர்ந்து 83 சதவீத உயர்வில் சியோமி நிறுவனம் 17 சதவீத சந்தையைப் பிடித்து உலகின் 2வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 3வது இடத்தில் ஆப்பிள் வெறும் 1 சதவீத வளர்ச்சியில் 14 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஓப்போ, வீவோ ஆகிய நிறுவனங்கள் 4வது மற்றும் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.