மக்களை பாடாய்படுத்தி எடுத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கூட, சற்றே ஓய்ந்துள்ளது. ஆனால் பாகுபாடின்றி ஏற்றம் கண்டு வரும் இந்த பெட்ரோல், டீசல் எப்போது குறையும். எப்போது மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
இன்றைய தினசரி நாளேடுகள், டிவி செய்திகள், ரேடியோ, மாத இதழ்கள் இப்படி எல்லாவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை பற்றிய செய்திகள் இல்லாமல் இல்லை. அந்தளவுக்கு இன்று மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சில நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்துள்ள நிலையில், விரைவில் பல நகரங்களில் இந்த நிலையை எட்டலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
அன்றாட தேவைகளாக மாறியுள்ள பெட்ரோல், டீசல்
ஏற்கனவே கொரோனாவினால் வாழ்வாதரத்தினை இழந்த மக்கள், தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். ஆனால் உணவு உடை, இருப்பிடம் போல தற்போது பெட்ரோல், டீசலும் மக்களின் அன்றாட தேவையாக மாறியுள்ளன. அதிலும் கொரோனாவின் வருகைக்கு பின்னர், மக்கள் பொது போக்குவரத்துகளை குறையத் தொடங்கியுள்ளது எனலாம்.
பதம் பார்க்கும் பெட்ரோல், டீசல் விலை
ஏனெனில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, இருசக்கர வாகனங்கள், கார்களை நாடத் தொடங்கியுள்ளனர். இப்படி இருக்கும் பட்சத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இதற்கிடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை அதிகரிப்பானது, மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது எனலாம்.
தொழிற்துறையை பாதிக்கும் 1
இதற்கிடையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையானது தொழிற்துறைகளை பாதிக்கும் என சிஐஐ தலைவர் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவருமான டிவி நாரேந்திரன் கூறியுள்ளார். மேலும் இது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டிய நேரமிது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும்
இது குறித்து மத்திய மாநில அரசுகளை நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய நரேந்திரன், இருவர்களையும் விவாதித்து விலையினை குறைக்க முன்வர வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் என்ன பிரச்சனை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் பொருட்களை கொண்டு வர வேண்டும்.
எரிபொருள் செலவினங்கள் அதிகம்
அரசுகள் இதற்கான ஒப்பந்தத்தினை போட வேண்டும். இதனால் பல தொழிற்துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக விமானத் துறையில் மொத்த செலவினங்களில் 60% எரிபொருள் செலவினங்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆக ஜிஎஸ்டியின் கீழ் அரசு கொண்டு வருவதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கொரோனாவால் பாதிப்பு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பற்றி பேசியவர், கொரோனாவினால் வேலை பாதிப்பு 8 - 14% வரை அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட இருமடங்காகும். அதோடு மக்களின் வருமானம், வாழ்வாதாரம் மற்றும் நுகர்வு ஆகியவற்றிலும் கொரோனா தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ செலவினங்களும் இந்த நேரத்தில் அதிகரித்துள்ளன.
ஜிஎஸ்டி குறைப்பு
இதனால் இன்னும் சில காலத்திற்கு நுகர்வு பாதிகப்படலாம் என்று நரேந்திரன் கூறியுள்ளார். ஆக இதனை கருத்தில் கொண்டு அரசு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும். மேலும் மீடியம் டெர்மில் ஜிஎஸ்டி குறைப்பும் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வாய்ப்பே இல்ல ராஜா
இவரின் கோரிக்கை இப்படி எனில், சில மணி நேரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு, அதனை முறையாக வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை மத்திய அரசே எடுத்து கொள்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா? சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.