நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அது பொருளாதாரத்தினை பதம் பார்க்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
இந்தியா மட்டும் அல்லாது, இன்று சர்வதேச நாடுகள் பலவற்றையும் பாடாய்படுத்தி வரும் ஓமிக்ரானின் தாக்கம், இந்தியா தற்போது தான் அதன் சுய ரூபத்தினை காட்டத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இது இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
ஜிடிபி குறித்தான கணிப்பு
இது 2020ம் ஆண்டினை நினைவுப்படுத்தும் விதமாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும், ஆய்வாளர்களும் இந்திய பொருளாதாரம் குறித்து தங்களது கணிப்புகளை கூறிவருகின்றனர். குறிப்பாக சிட்டி குழுமம், இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பலவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தான கணிப்புகளை குறைத்துள்ளனர்.
ஜிடிபி 9.2%
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது, மார்ச் காலாண்டுடன் முடிவடையும் நிதியாண்டில் 9.2% ஆக குறையலாம் என சில தினங்களுக்கு முன்பு அரசு கணிப்புகள் வெளியானது. இந்த கணிப்பு விகிதமானது இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பான 9.5% ஐ விட குறைவாகும். இவற்றோடு அரசு அட்வான்ஸ் ஜிடிபி குறித்தான கணிப்புகள், வரி வருவாய் மதிப்பீடுகள், நிதி பற்றாக்குறை மதிப்பீடு உள்ளிட்டவை பற்றி அரசு அப்போது எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிட்டி குழுமத்தின் கணிப்பு
நடப்பு காலாண்டில் ஓமிக்ரான் பரவல் காரணமாக பொருளாதார தாக்கம் என்பது, முந்தைய அலைகளை விட குறைவாக இருக்கலாம். எனினும் முந்தைய மூன்று மாதங்களில் பொருளாதாரம் குறித்தான செயல்பாடுகள் குறைவாகவே இருந்தது என சிட்டி பொருளாதார நிபுணர் சமிரன் சக்ரவர்த்தி மற்றும் பக்கார் எம் ஜைடியும் சமீபத்திய அறிக்கையில் கூறினர். இவர்கள் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.8%ல் இருந்து 9% ஆக குறைத்துள்ளனர். அதே போல அடுத்த நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தினையும் 8.7%ல் இருந்து 8.3% ஆக குறைத்துள்ளது.
இந்தியா ரேட்டிங்ஸ் & ஐசிஐசிஐ வங்கி கணிப்பு
இதேபோல இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் முன்னதாக 9.4% ஆக இருந்த வளர்ச்சி கணிப்பினை, 9.3% ஆக குறைத்துள்ளது.
இதே ஐசிஐசிஐ வங்கி முன்னதாக 9.85 ஆக கணித்திருந்த நிலையில், 9.6% ஆகவும் குறைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தெற்காசிய நாட்டில் தினசரி கொரோனாவின் தாக்கம் என்பது இரண்டு வாரங்களுக்கு முன்பு, 6500 ஆக இருந்தது. இது தற்போது 1,70,000 ஆக உள்ளது. இதன் காரணமாகத் தான் தற்போது நாட்டின் பல பகுதிகளில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த போக்கு இனி வரும் வாரங்களிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் பொருளாதாரம் இன்னும் சரிவினைக் காணலாம் என ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்,.