அமெரிக்காவின் முன்னணி மற்றும் பழமையான வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் இந்தியா உட்பட 13 நாடுகளில் செய்யும் ரீடைல் மற்றும் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. இந்தத் திடீர் முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா..
சிட்டி குரூப்-கிற்கு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் மற்றும் டிரேடிங் வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமானம் கிடைக்கும் காரணத்தால் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 சந்தைகளில் இருந்து ரீடைல் வங்கி சேவையில் இருந்து விலகுகிறது.
மேலும் இந்த நாடுகளில் ரீடைல் மற்றும் நுகர்வோர் வங்கி சேவையில் பிற வங்கிகளுடன் போட்டிப்போட முடியாத காரணத்தால் தான் வெளியேற முடிவு செய்துள்ளது.
13 நாடுகளில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள சிட்டிகுரூப் ரீடைல் வர்த்தகப் பிரிவில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள காரணத்தால், இந்த விற்பனை மூலம் சுமார் 6 பில்லியன் டாலர் அளவிலான நிதியைத் திரட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிட்டிகுரூப்-ன் கிரெடிட் கார்ட் வர்த்தகத்தை எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் ஆர்பிஎல், ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி போன்ற வளர்ந்து வரும் வங்கிகளும் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. ஹெச்டிஎப்சி மீது ரிசர்வ் வங்கி புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றத் தற்காலிக தடை விதித்துள்ள நிலையில் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தைக் கைப்பற்றும் போட்டியில் இருந்து விலகியுள்ளது.
இந்திய வர்த்தகத்தைப் போல் ஆஸ்திரேலியா, போலாந்து மற்றும் இதர தென் ஆசிய நாடுகளில் இருக்கும் வர்த்தகத்தை விற்பனை செய்யும் பணியில் முதற்கட்டத்தைத் துவங்கியுள்ளதாகச் சிட்டிகுரூப் திட்டம் குறித்து அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர்.