இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் பெரும்பலனோர் தற்போது ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வீட்டுத் தினசரி தேவைகள் முதல் அனைத்தையும் ஆன்லைன் வாயிலாகவே வாங்கவும், பெறவும் மக்களை மாறியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது ஆன்லைன் சேவைகள் அனைத்தும் பெரு நகரங்களில் அதிகமாக இருக்கும் காரணத்தால், இன்றைய காலகட்டத்தில் நகரத்தில் வாழும் மக்கள் தான் ஆன்லைன் நிறுவனங்களின் முதன்மையான இலக்காக உள்ளது. இதேபோல் கொரோனா தொற்றும் இந்தியாவில் தற்போது பெரு நகரங்களில் அதிகமாக இருக்கும் காரணத்தால், நகரத்தில் வாழும் மக்கள் அதிகளவிலான ஆன்லைன் ஷாப்பிங் செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக ஆன்லைன் ஷாப்பிப் செய்யும் நகர மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
கொரோனா
இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் நகர வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதுவும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து கடந்த 3 மாத காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை இரட்டிப்பு வளர்ச்சி அடைந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த 42 சதவீத வாடிக்கையாளர்களின் 50 சதவீதம் பேர் புதிய வாடிக்கையாளர்களாகவும், முதல் மற்றும் 2ஆம் தர நகரங்களில் இருந்து வந்துள்ளனர்.
புதிய வாடிக்கையாளர்கள்
கொரோனாவுக்கு முன்பு நகரத்து ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாட்டின் மொத்த ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கையில் வெறும் 22 சதவீதம் தான். இந்த எண்ணிக்கை தான் தற்போது 42 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் புதிதாக வந்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் அமேசான் மற்றும் கூகிள் தளத்தின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திற்குள் வந்துள்ளதாகத் தெரிகிறது.
கொரோனாவுக்கு முன்
தற்போது இந்திய ஆன்லைன் சந்தையில் வர்த்தக அளவீடுகள் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடைந்துள்ளது. பிற எந்தத் துறையிலும் இத்தகைய வளர்ச்சி அடைந்திடாத நிலையில் ஈகாமர்ஸ் தளத்தில் மட்டும் வருவதற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் மக்கள் வீட்டில் முடிங்கியிருப்பதும், இதனால் அவர்கள் ஆன்லைன் சேவையை நாடுவதும் தான்.
மேலும் ஈகாமர்ஸ் தளத்தில் இக்காலகட்டத்தில் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஈகாமர்ஸ் தளம் மீண்டுள்ளது.
திருவிழா
அடுத்தச் சில வாரத்தில் இந்தியாவில் திருவிழா காலம் என்பதால், நாட்டின் அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களும் அதிரடி ஆபர்களும், தள்ளுபடி கூடி விற்பனை திருவிழாவை அறிவிக்கும், அப்போது ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கையும், அதைச் சார்ந்துள்ள வர்த்தகமும் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணமதிப்பிழப்பு எப்படி இந்தியாவில் ஆன்லைன் பேமெண்ட் சந்தையின் வளர்ச்சிக்கு வித்திட்டதோ, அதேபோல் கொரோனா இந்தியாவில் ஆன்லைன் சேவை வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.