ஆன்லைன் பயண சேவை நிறுவனமான கிளியர் ட்ரிப் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை வரும் காலாண்டில் 40% அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இது டிசம்பர் 2022ல் மொத்த ஊழியர்கள் தொகுப்பினை 700 பேராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது கடந்த 2021ல் 240 ஊழியர்களை கொண்டிருந்தது என இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் போக்குவரத்து துறையும் ஒன்று. இதற்கிடையில் தான் பயண சேவை நிறுவனமான கிளியர் ட்ரிப்பும் ஒன்று. பாதிப்பினை கண்டிருந்தாலும் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
பணியமர்த்தல்
இவ்வாறு பணியமர்த்தலில் கூடுதல் வேலை விகிதமானது, தொழில்நுட்பம், வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் வணிகப் பகுதிகளில் இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இது குறித்து கிளியர் ட்ரிப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அய்யப்பன் ராஜகோபால், தற்போது இத்துறையானது மெதுவாக வேகத்தில் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. எங்கள் வணிகத்தினை மேம்படுத்த இது சரியான நேரம். இது மற்ற துறைகளை விட மெதுவாக மீண்டு வந்து கொண்டுள்ளது.
சலுகைகளை அளிக்க திட்டம்
2022ல் ஆண்டில் நிறுவனம் சற்று வளர்ச்சி காணத் தொடங்கியுள்ள நிலையில், அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று சலுகைகள். இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும் என கிளியர் ட்ரிப் நம்புகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பயண அனுபவங்களை மேம்படுத்த திட்டமிட்டு வருகின்றது.
எங்கெல்லாம் பணியமர்த்தல்
இந்தியா முழுவதும் தனது ஹோட்டல் போர்ட்போலியோவினை உருவாக்க இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி
மொத்தத்தில் ஒவ்வொரு துறையும் தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், பணியமர்த்தலானது மேம்பட்டு வருகின்றது. எனினும் இன்று அளவிலும் கொரோனாவினால் வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலா, ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட சில துறைகளில் வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், தற்போது தான் மெதுவாக மேம்பட தொடங்கியுள்ளது.