வீட்டை சுத்தம் செய்யும்போது ஓடாத டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்ஸி, பயன்படுத்தாத சோபா, கட்டில், மெத்தை போன்றவற்றை எப்படி அகற்றுவது என்று நம்மில் பலர் குழம்பியிருப்போம். இதுபோன்ற பழைய பொருட்களை என்ன செய்வது என்று யோசித்து கடைசியில் யாருக்கும் தெரியாமல் சிலர் நடுத்தெருவில் வீசி விடுவார்கள். சிலரோ வீடு இல்லாத காலி மனையில் போட்டு விடுவார்கள், இப்படி போடுவதால் அந்தந்த தெரு குப்பை கிடங்காவது தான் மிச்சம். இதுபோன்று பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பெங்களூர் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட், "Dclutter" என்ற அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது.
சில நாட்களாக பெங்களூரில் குப்பை கிடங்குகள் அதிகரிக்கத் தொடங்கியது. அதை சரி செய்யும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களிடம் பெரிய அளவிலான பொருட்கள் இருந்தால், நீங்கள் Dclutter அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தலாம். Dclutter சேவையை பயன்படுத்த கட்டணம் இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்?. ஒரு கட்டணமும் கிடையாது. உங்கள் வீட்டிற்கே வந்து, தேவையில்லாத பழைய பொருட்களை ஒரு பைசா கூட செலவில்லாமல் வாங்கிச் செல்வார்கள்.
உங்களிடம் இதே போன்ற பொருள்கள் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது Dclutter ஆப்-ஐ கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு ரெஜிஸ்டர் செய்து உள்நுழைய வேண்டும். உங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய பொருள் என்ன? என்பதைத் தேர்ந்தெடுத்து விட்டு, எப்போது அந்த பொருளை ஊழியர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நேரத்தையும் வழங்க வேண்டும். பின்னர் உங்கள் வீட்டிற்கு வந்து அந்த பொருளை சேகரித்துக் கொள்வார்கள். Dclutter ஆப்பை பயன்படுத்தி கட்டில், சோபா, ஸ்டாண்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் வீட்டில் இருந்து அகற்றலாம்.

சேவை எப்போது கிடைக்கும்?: பெங்களூரில் இந்த சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மக்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய பெங்களூர் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட்-இன் CEO காரி கௌடா, "தற்போது Dclutter சேவை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கிடைக்கும். பொதுமக்கள் இதற்கு வழங்கும் வரவேற்பை பொறுத்து வார நாட்களிலும் சேவை நீட்டிக்கப்படும். சேகரிக்கப்படும் அனைத்து பொருட்களும் மறுசுழற்சி செய்யப்படும்", என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரை எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பை சேர்ந்து மீண்டும் மீண்டும் குப்பை கிடங்காவதை அதிகாரிகள் கவனித்தனர். ஒரு இடத்திலிருந்து குப்பைகள் அகற்றப்பட்ட பிறகு, மீண்டும் மீண்டும் குப்பை சேரத் தொடங்கியது. தூய்மை பணியாளர்கள் பிற குப்பைகளை அகற்றினாலும், பெரிய அளவிலான பொருட்களை அகற்றும் போது சிரமத்திற்கு ஆளாகினர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு Dclutter ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னமும் மக்கள் இரும்பு மற்றும் தகரம் போன்றவற்றை பழைய பேப்பர் காரர்களிடம் போடுகின்றனர். ஆனால் பணம் கிடைக்காத பீங்கான்கள், மர சாமான்கள் போன்றவற்றை அப்படியே வீதியில் வீசிவிடுகின்றனர், இதை தடுப்பதற்காக பெங்களூரில் உருவாக்கப்பட்டுள்ள Dclutter ஆப்பை பிற நகரங்களிலும் கொண்டு வந்தால் குப்பை கிடங்குகள் வெகுவாக குறையும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications