தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜயை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர் அப்போது விஜய் வந்த போது அவரை காணும் ஆர்வத்தில் பலரும் முண்டி அடித்ததால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சராக விஜய் இன்று முதன்முறையாக கரூர் சென்றார்.
காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற விஜய் அங்கிருந்து கார் மூலம் கரூருக்கு சென்றார். வழிநெடுக அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். இதனை அடுத்து அட்லஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். 5000 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை விவரிக்கும் வகையில் தான் விஜய் பேசவே தொடங்கினார்.

ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் காயங்கள், வலிகளை மறக்க முடியாது. கரூர் சம்பவம் எனக்கு அதிக மனவலியை கொடுத்தது என்றார். என் அக்கா தங்கைகளை கரூரில் இழந்தேன்... கள்ளங்கபடமற்ற குழந்தைகளை இழந்தேன். என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம் என கூறினார்.
வலியோடு இருந்த என்னை ஓடி மறைந்துவிட்டேன் என கூறினார்கள், பணமா? ஜனமா? என என்னைக் கேட்டால், ஜனம்தான் முக்கியம் என நான் கூறுவேன் என குறிப்பிட்ட அவர் முதலில் பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினர். மக்கள் பாதுகாப்பை கருதி கனத்த இதயத்துடன் பெரம்பலூர் செல்லாமலேயே பயணத்தை முடித்து கொண்டாம். ஆனால் நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து விட்டது போலீஸ்தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் என சொல்லி பிரஷர் போட்டது யார்? என வினவிய முதலமைச்சர் விஜய், கரூர் காவலர்களை முழுமையாக நம்பினேன். அந்த நாளில் கரூர் காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்தது யார்? கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்து என்பது தெரியும் என கேட்டார்.
கரூரில் நடந்தது ஒரு போலீஸ் நாடகம் என குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய் கரூர் சம்பவம் என மனதை விட்டு நீங்காது என்றார். இனி வரும் நாட்களில் இது போன்ற அரசியல் சதி, அரசியல் சூழ்ச்சி ஆகியவை நடக்காமல் இருக்க வேண்டும் என கூறிய அவர் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மக்களுக்காக தவெக சார்பில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

