அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மூலம் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை பெரம்பூருக்கு கிடைத்துள்ளது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதி என இரண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். பெரம்பூர் தான் முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதி என்ற பெருமையை பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் சொந்த தொகுதி என்பதால் பெரம்பூரில் பல மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக பெரம்பூரில் பல்வேறு உள்கட்டமைப்புகளை கொண்டு வர விஜய் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெரம்பூர் தொகுதியின் அடையாளமே மாற இருக்கிறது. குறிப்பாக நவீன மருத்துவமனை, விளையாட்டு மையம் உள்ளிட்டவை அமைய போவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

பெரம்பூர் ஜி.என்.டி சாலை அருகே சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதில் கால்பந்து மைதானம், கிரிக்கெட் வலைப்பயிற்சி வசதி, பேட்மிண்டன் மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட நவீன விளையாட்டு வசதிகள் இடம்பெறவுள்ளன. இது வட சென்னை இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாக சத்தியமூர்த்தி நகரில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதில் உள்நோயாளி சிகிச்சைக்கான வசதிகளும் இருக்கும். தற்போது இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பெரியார் நகர் அல்லது தண்டையார்பேட்டை மருத்துவமனைகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ள நிலையில், இந்த புதிய மருத்துவமனை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதி மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையை வழங்கும்.

அதே போல எம்.கே.பி நகரில் உள்ள நார்த் அவென்யூ சாலையை, அண்ணா நகரில் உள்ளது போன்ற ஒரு நவீன "உணவு வீதியாக" மாற்ற திட்டமிட்டுள்ளனர். சுமார் 270 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலை, பெரம்பூர் மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாற இருக்கிறது. ஏற்கனவே உள்ள சாலையை சீரமைத்து, மக்கள் வந்து செல்லும் வகையில் ஒரு பொழுதுபோக்கு மற்றும் உணவு மையமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை பள்ளிகள் திட்டத்தின் கீழ், 1950 மற்றும் 1960-களில் கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் மீண்டும் கட்டப்பட உள்ளன. வியாசர்பாடி ஏரியைத் தூர்வாரி, சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான நிதி சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்பு நிதி, மாநில அரசு மானியங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கி நிதி எனப் பல்வேறு ஆதாரங்கள் மூலம் திரட்டப்பட உள்ளன.
மாநகராட்சி ஆணையர் சமீரன் மற்றும் உயர் அதிகாரிகள் இப்பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்று பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். மொத்த 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த திட்டங்கள் நிறைவேறும் போது பெரம்பூர் தொகுதியின் அடையாளமே மாறி இருக்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக திமுக ஆட்சியில் சென்னை கொளத்தூர் தொகுதி முதலமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்று பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றது.


Click it and Unblock the Notifications

