தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்துள்ளது. விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். வழக்கமாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில் முதன்முறையாக இந்த கட்சிகள் எதிர்க்கட்சிகளாக மாறி இருக்கின்றன.
எப்போது அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி அமைத்தாலும் முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவார்கள் அல்லது படிப்படியாக அதனை வேறு பெயருக்கு மாற்றி செயல்படுத்துவார்கள். இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் அதே பாணியை பின்பற்றுவாரா, மக்கள் நல திட்டங்களை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் விஜய் தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய விஷயத்தை தொடங்கி வைத்துள்ளார்.

அதாவது கடந்த திமுக அரசின் மக்கள் நல திட்டங்கல் குறிப்பாக மக்களுக்கு நேரடியாக பணம் வரவு வைக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி அனைவர் மனதிலும் இடம்பிடித்து விட்டார். அந்த வகையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதுமைபெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு முன்பிருந்ததை போல மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே உழைக்கும் மகளிருக்கு உரிமை தொகையாக மாதம் 1000 ரூபாய் பணம் நேரடியாக வங்கி கணக்கிலேயே வரவு வைக்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது. இப்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இது வேறு வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 2023ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த டிசம்பரிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு புது பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். தற்போது 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அன்று காலை வங்கி கணக்கில் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும். தேர்தலைக் காரணம்காட்டி முன்கூட்டியே 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையாக 3,000 ரூபாய் மற்றும் கோடைக் கால சிறப்புத் தொகையாக 2,000 ரூபாய் என மொத்தம் 5,000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் கடந்த பிப்ரவரி மாதமே தமிழக அரசு வரவு வைத்தது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் நடந்து தவெக தலைவர் விஜய் முதலமைச்சரான நிலையில் மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் வழங்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு, மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 1,000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கூறியுள்ளார்.
விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும் என கூறி இருந்த நிலையில் அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவது எப்போது, அதுவரை மகளிர் உரிமை தொகையாவது கிடைக்குமா என பல கேள்விகள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.


Click it and Unblock the Notifications

