தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இணையாக ஒவ்வொரு தொழில்நகரத்தின் உள்கட்டமைப்பை அதிகப்படியான கவனத்துடன், சிறப்பான திட்டமிடல் உடன் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. உற்பத்தி, சேவை, சரக்கு போக்குவரத்து, நகரத்தின் எதிர்கால வளர்ச்சி என அனைத்தையும் கணக்கிட்டு தமிழ்நாட்டின் 6 முக்கிய நகரங்கள் அல்லது தொழிற்துறை பகுதிகளை மேம்படுத்தும் விதமாக 5 ஆண்டுக்கு முன்பு தமிழ்நாடு அரசு முக்கியமான முடிவை எடுத்தது.
இதை தற்போது செயல்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம் மற்றும் ஓசூர் ஆகிய 6 நகரங்களுக்கு நகர்ப்புற வளர்ச்சி ஆணையங்கள் அமைக்க உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி.ராஜ்குமார் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 6 நகர்ப்புற வளர்ச்சி ஆணையங்கள் (Urban Development Authorities) தற்போது படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் என்பது சென்னையின் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) போன்ற விரிவான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.
2021ஆம் ஆண்டிலேயே இந்த 6 நகரங்களுக்கும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக அப்போது தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971, 2022-ல் திருத்தம் கூட கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இந்த ஆணையங்கள் நடைமுறைக்கு வரவில்லை.
இதுமட்டும் அல்லாமல் அமைச்சர் ராஜ்குமார் சட்டமன்றத்தில் கூறுகையில் தமிழ்நாட்டில் பெகு நகரங்கள் மற்றும் முக்கிய வர்த்தக பகுதிகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தாமல் 10 முக்கிய பிராந்தியங்களுக்கான Regional Plans தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதன் படி மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 பிராந்தியங்களுக்கான நகரபுற வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக ராஜ்குமார் தெரிவித்தார்.
அடுத்தக்கட்ட பணியாக தமிழ்நாட்டின் டாப் 8 முக்கிய பிராந்தியங்களுக்கான நகரப்புற வளர்ச்சியின் இறுதி மாஸ்டர் பிளான் GIS அடிப்படையில் தயாரித்து அடுத்த வருடம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜ்குமார்.
ஏற்கனவே சென்னைக்கான 2வது மாஸ்டர் பிளான் தயாராகிக்கொண்டு இருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களை பெரிய அளவில் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications