கொரோனா வைரஸால் உலகம் முழுக்க உருவாகி இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை, அந்த நோயால் பாதிக்கப்படுவது மற்றும் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாறுவது தான்.
ஆனால் பொருளாதார ரீதியாக பல ஆண்டுகளாக உருவான வேலை வாய்ப்புகள் எல்லாம் சில நாட்களில் கண் முன்னே காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இது கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் மிகக் பெரிய நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு பகீர் தகவலைத் தான் CMIE என்கிற அமைப்பு தற்போது வெளியிட்டு இருக்கிறது.
இந்தியா முழுக்க
இந்தியாவில், கடந்த ஏப்ரல் 2020-ல் வேலை இல்லா திண்டாட்டம் திடீரென 23.5 சதவிகிதத்தைத் தொட்டு இருக்கிறது. காரணம் கொரோனா. நகர் புறங்களில் 24.95 சதவிகிதம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கிராம புறங்களில் 22.89 சதவிகிதம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள்.
அதிகரிக்கிறது
கடந்த மே 03, 2020 உடன் முடிவடைந்த வாரத்தில், வேலை இல்லா திண்டாட்டம் 27.1 சதவிகிதத்தை தொட்டு இருப்பதாக CMIE அமைப்பு சொல்கிறது. இது வரலாறு காணாத உயர்வு எனவும் குறிப்பிட்டு இருக்கிறது CMIE சர்வே. ஆக இன்னும் வேலை இழப்புகள் அதிகரிக்கும் என்பதையே இந்த தரவுகள் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.
11.4 கோடி பேர்
இந்தியாவில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மட்டும் சுமாராக 11.4 கோடி பேர் தங்கள் வேலையை இழந்து இருக்கிறார்களாம். CMIE கணக்குப் படி இந்தியாவில் சுமாராக 40 கோடி பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதில் அதிக வேலை வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருந்த மாநிலமான தமிழகமும் சரமாரியாக பாதிக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஐ எல் ஓ எச்சரிக்கை
கடந்த மாதம், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு (International Labor Oranization), இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் கடுமையான வறுமைக்கு தள்ளப்படலாம் என எச்சரித்து இருந்தது நினைவு கூறத்தக்கது. சரி தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டப் பிரச்சனைக்கு வருவோம்.
தமிழகம்
CMIE கணக்குப் படி, இந்தியாவிலேயே அதிகம் வேலை இல்லா திண்டாட்டம் இருக்கும் மாநிலம் (அதிகம் வேலை இழந்தவர்கள்) புதுச்சேரியில் தான் இருக்கிறார்கள். சுமார் 75 % பேர் தங்கள் வேலையை இழந்துவிட்டார்கள். புதுச்சேரிக்கு அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 49.8 % பேர் வேலையை இழந்து இருப்பதாகச் சொல்கிறது CMIE.
முந்தைய நிலை
கடந்த மார்ச் 2020-ல் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் 19-வது இடத்தில் இருந்தது தமிழகம். மார்ச் 2020-ல் தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் 6.3 % தான். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால், ஏப்ரலில் இந்தியாவிலேயே வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் அல்லது அதிக பேர் வேலை இழந்த மாநிலங்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது.
கொஞ்சம் பாருங்க
தமிழகம் எல்லாம் பொருளாதார ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் ரீதியாகவும் முன்னேறிய மாநிலம் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த கொரோனா நம்மை கடந்து செல்வதற்குள், மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக மாற்றிவிடும் போல் இருக்கிறது. அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.