இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறியீடுகளில் மிக முக்கிய ஒன்றான ஜிடிபி, கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையான காலாண்டில் 4.7 % மட்டுமே வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு.
இது சுமாராக கடந்த, ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜிடிபி சரிவே, நம்மை பெரிதும் பாதித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், இன்னொரு செய்தி, நம் காதில் இடியை இறக்கியது போல வந்திருக்கிறது.
வேலை வாய்ப்பு
கடந்த சில வருடங்களாகவே வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகள், இந்திய மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறத் தொடங்கி இருக்கின்றன. கடந்த 2017 - 18 நிதி ஆண்டில், இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவிகிதம் தொட்டதாகச் செய்திகள் வெளியானது. அதாவது 100 பேரில் 6.1 பேருக்கு வேலை இல்லை.
45 வருட உச்சம்
இது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு, வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதன் பின்னும் மத்திய அரசு தன்னால் முடிந்த வரை வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இதுவரை நல்ல பலன்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.
2019 உச்சம்
Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு தொடர்ந்து, இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம் தொடர்பான தரவுகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். 2019 - 20 நிதி ஆண்டின், இரண்டாவது அரையாண்டின் தொடக்கமான, அக்டோபர் 2019-ல் இருந்து, வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருந்த மாதம் எது என்றால் அக்டோபர் 2019 தானாம்.
ஒப்பீடு
கடந்த அக்டோபர் 2019-ல் அதிகபட்சமாக வேலை இல்லா திண்டாட்டம் 8.10 சதவிகிதமாக இருந்தது. அதன் பிறகு நவம்பர் 2019-ல் 7.23 %, டிசம்பர் 2019-ல் 7.60 %, ஜனவரி 2020-ல் 7.16 % என குறைந்து கொண்டே வந்தது. ஆனால் இந்த பிப்ரவரி 2020-ல் மீண்டும் ஒரு திடீர் ஏற்றம் கண்டு, வேலை இல்லா திண்டாட்டம் 7.78 சதவிகிதத்தைத் தொட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே தேங்கி நிற்கிறது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. இந்த கொடூர வைரஸால், மேற்கொண்டு இன்னும் கூட பொருளாதாரம் மந்த மடைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எல்லாம் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என காத்திருந்து பார்ப்போம்.