தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் வேகமாக வளரும் ஒரு மாவட்டமாக மாற இருக்கிறது. கப்பல் கட்டுமான நிறுவனங்கள் தேடி வந்து தூத்துக்குடியில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளன. இதனால் வருங்காலத்தில் இந்தியாவின் பெரிய கப்பல் கட்டும் நகரமாக தூத்துக்குடி உருமாற இருக்கிறது.
இந்தியாவின் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான Cochin Shipyard Ltd நிறுவனம், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தனது கப்பல் கட்டும் திறனை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக 2000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள இருக்கிறது.இது தொடர்பாக வ.உ.சி துறைமுக ஆணையம் வெளியிட்ட டெண்டரில், கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் யூனிட்டை அமைப்பதற்காக கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், 49 ஹெக்டேர் நிலம் மற்றும் 7 ஹெக்டேர் நீர்ப்பரப்பை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தம் கோரி இருப்பதாக தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்கள் பங்கேற்ற டெண்டரில் அதிகபட்ச ஏலதாரராக கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் உருவெடுத்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம் ஜிஎஸ்ட்இ உள்பட 306.31 கோடி ரூபாயை முன் தொகையாக குறிப்பிட்டுள்ளதாம். இதன் மூலம் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்நிறுவனம் கப்பல் கட்டும் தளங்களை அமைத்து செயல்படுத்த உள்ளது.
வஉசி துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளமானது, சிறிய அளவிலான கடற்கரை கப்பல்கள் மற்றும் கடல்சார் உபகரணங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளும். ஏற்கனவே தூத்துக்குடியில் தென்கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெரிய கப்பல் கட்டும் இடத்தை தேர்வு செய்துள்ளது. அதற்கு அருகிலேயே கொச்சின் ஷிப்யார்டின் கப்பல் கட்டும் தளமும் அமைய உள்ளது.
மத்திய அரசு அண்மை காலமாக கப்பல் கட்டும் நிறுவனங்கள் இந்தியாவின் கடற்கரை யோர நகரங்களில் முதலீடு செய்ய ஊக்குவித்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு 19,989 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பல் கட்டும் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டட்தின் கீழ் வரும் நிறுவனங்கள் பெரும்பாலும் தூத்துக்குடியை தான் விருப்ப தேர்வாக கூறுகின்றன.
உலக அளவில் கப்பல் கட்டுமானத்தில் 2030-க்குள் முதல் 10 இடங்களுக்குள்ளும், 2047-க்குள் முதல் 5 இடங்களுக்குள்ளும் வர வேண்டும் என்பதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் கப்பல் கொள்ளளவை 7 மடங்காக அதிகரித்து 100 மில்லியன் கிராஸ் டன்னேஜாகவும், கப்பல் தயாரிப்பை 40 மடங்காக அதிகரித்து 4.5 மில்லியன் கிராஸ் டன்னேஜாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுக பகுதி இந்தியாவின் மிக முக்கியமான கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் துறைமுக நகரமாக மாறும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். எனவே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. இங்கே பல நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்கும். இவை தூத்துக்குடியின் அடையாளத்தையே மாற்றும் என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications

