இந்திய முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார தடுமாற்றத்தால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில், டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தின் பென்ச் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது முக்கிய பிரச்சனையாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 3,00,000 த்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்புக்கு பின்பு ஒட்டுமொத்த ஐடி சேவை துறை ஊழியர்களும் எப்போது யார் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற அச்சத்தில் இருந்த நிலையில் காக்னிசென்ட் அறிவிப்பு பயத்தை போக்கி நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதை விட முக்கியமாக காக்னிசென்ட் நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் தனது ஊழியர்களுக்கு அப்ரைசல் வழங்கியது. தற்போது மீண்டும் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காக்னிசென்ட் நிறுவனம் கடந்த 18 மாதத்தில் 3வது முறையாக சம்பள உயர்வை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
காக்னிசென்ட்டின் தலைமை மக்கள் அதிகாரி ரெபேக்கா ஷ்மிட் தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. ரெபேக்கா ஷ்மிட் மே 5 முதல் காக்னிசென்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். ரெபேக்கா ஷ்மிட் வெளியேறிய பின்பு பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசன்ட், கடந்த 18 மாதங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான உலகளாவிய ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய உயர்வை அறிவித்துள்ளதோடு 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் முந்தைய ஆண்டின் 28 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த 3வது சம்பள உயர்வு அறிவிப்பு அசோசியேட் டைரக்டர் பதவி வரையில் இருப்பவர்களுக்கு கால அட்டவணைக்கு முன்னதாகவே உயர்வு கிடைக்கும் எனவும் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ ரவிக்குமார் தெரிவித்துள்ளார். காக்னிசென்ட் நிறுவனம் முதல் முதலில் துவங்கியது சென்னையில் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?


Click it and Unblock the Notifications