பெங்களுரு: ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அதன் நிகரலாபம் 30 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 348 மில்லியன் டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்கா நிறுவனமான இது, பெரும்பாலும் அதன் சேவைகளை இந்தியாவிலும் செய்து வருகிறது. அதே போல அதன் பெரும் பகுதி ஊழியர்களும் இந்தியர்களே.
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கொரோனா சமயத்தில் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. எனினும் தேவை வழக்கம்போல உள்ளதாகவும் கூறி வருகின்றன. அதோடு பல புதிய ஒப்பந்தங்களை போட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன. சரி காக்னிசண்ட் நிறுவனம் என்ன கூறியுள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவுகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
நஷ்டத்திற்கு என்ன காரணம்
காக்னிசண்ட் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், செப்டம்பர் காலாண்டில் அதன் வருவாய் 0.1% குறைந்து, 4.2 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இந்த நிறுவனம் ஜனவரி - டிசம்பர் கணக்கிலான ஆண்டை பின்பற்றுகிறது.
டிஜிட்டல் வணிகம் வளர்ச்சி
நியூஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், அதன் முழு ஆண்டு வருமானம் ஏறக்குறைய 16.7 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது நிலையான நாணயத்தின் அடிப்படையில் 0.4% குறைவாகும். இதற்கிடையில் அதன் டிஜிட்டல் வர்த்தகத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 13% வளர்ச்சி கண்டுள்ளது. இது மொத்த வருவாயில் 42% பங்களித்துள்ளது கவனிக்கதக்க விஷயமாகும்.
டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்தி வருகிறோம்
நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சூழலுக்கு ஏற்றவாறு நாங்கள் எங்கள் போர்ட்போலியோவை வலுப்படுத்தினோம். எங்களது டிஜிட்டல் வணிகத்தினை நாங்கள் மேம்படுத்துகிறோம். எங்களது போட்டித் தன்மையை அதிகரித்தோம் என்று காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்பரிஸ் தெரிவித்துள்ளார்.
நிதித்துறையில் வருவாயில் வீழ்ச்சி
காக்னிசண்ட் நிறுவனம், டிஜிட்டல் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் அனலிஸ்டிக் கிளவுட், இணையம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. நிதிச் சேவையில் வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 1.5% குறைந்துள்ளது. இது வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை சரிவால் சற்று வீழ்ச்சி கண்டுள்ளதே காரணம் என்றும் கூறியுள்ளது. எனினும் ஹெல்கேர் துறையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 4.8% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏற்ற இறக்கத்தினை கண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக சற்று சரிவினைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.