தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், அமெரிக்காவினை சேர்ந்தது என்றாலும், இங்கு பணிபுரியும் பெரும்பான்மையான ஊழியர்கள் இந்தியர்களே.
ஆக இந்த நிறுவனத்தின் எந்தவொரு அறிவிப்பினாலும் பெரிதாக பயன்பெறுவது இந்தியர்கள் தான். பாதிக்கப்படுவதும் இந்தியர்கள் தான்.
கடந்த ஆண்டில் யாருமே எதிர்பாராத வகையில் கொரோனாவின் தாக்கம், உலக பொருளாதாரத்தினை வாரிச் சுருட்டிக் கொண்டது. இதன் காரணமாக நிறுவனங்கள், தொழிற்சாலை என பலவும் முடங்கின. இதன் காரணமாக பெரும்பான்மையான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு என அனைத்தையும் நிறுத்தின.
வளர்ச்சி அதிகரிப்பு
ஏன் சில நிறுவனங்கள் பணி நீக்கமும் செய்தன. ஆக இருக்கும் வேலையாவது நிலைக்குமா என்ற நிலை தான் இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பழையபடி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி விட்டன. அதோடு இந்த கொரோனா காலகட்டத்தில் டிஜிட்டல் தேவைகள் மிக அதிகரித்தன. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள், பல புதிய ஒப்பந்தங்களை போட்டு வருகின்றன.
காக்னிசண்ட் நிலவரம்
இதற்கிடையில் தற்போது சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என வாரி வழங்கி வருகின்றன. அதோடு புதிய பணியமர்த்தல் என ஐடி துறையானது சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இதற்கிடையில் காக்னிசண்ட் நிறுவனம் கடந்த ஆண்டில் ஆள்குறைப்பு செய்யப்போவதாக பல செய்திகள் வெளியானது. குறிப்பாக பெஞ்ச் ஊழியர்களில் எந்த திட்டத்திலும் இல்லாதவர்களை பணி நீக்கம் செய்வதாகவும், ஊழியர்களை ராஜினாமா செய்ய சொல்வதாகவும் பலவாறு செய்திகள் வெளியாகியது.
ஊழியர்களுக்கு சர்பிரைஸ்
ஆனால் அதற்கெல்லாம் ஊழியர்களுக்கு சேர்த்து வைத்து சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, பல சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டை விட அதிகமாக போனஸ் என அறிவித்துள்ளது. அதோடு 24,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு எங்களுக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது.
ஊழியர்களை ஊக்குவிக்க போனஸ்
எனினும் எங்களது சேவையை கடினமான காலகட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தொடர, பணியாற்றிய ஊழியர்களை, ஊக்குவிக்கும் விதமாக போனஸை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதோடு கடந்த ஆண்டில் நாங்கள் சவாலான நிலைமையில் இருந்திருந்தாலும், 2019ஐ விட, அதிக போனஸை வழங்க உள்ளோம் என காக்னிசண்டின் இந்திய தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் நம்பியார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது எங்கள் ஊழியர்களின் கடினமான உழைப்பு மற்றும் உயர் செயல்திறனுக்கு கிடைக்கும் வெகுமதி என்று கூறியுள்ளார்.