பெங்களூரு: ஐடி துறையில் அவ்வப்போது பணி நீக்கம் என்பது சாதாரணமான விஷயம் தான். எனினும் அது இந்த சமயத்தில் இருப்பது தான் மிக கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக, பல துறைகளில் பணி நீக்கம், விருப்ப ஒய்வு என களைகட்டி வருகிறது.
இது ஒரு புறம் எனில் பல நிறுவனங்கள் புதியதாக வேலைக்கு ஆள் எடுக்கும் ஒரு செயலையே மறந்து விட்டன. இன்னும் பல நிறுவனங்கள் தொடர்ந்து வேலையில்லா நாட்களை அறிவித்து வருகின்றன.
2019 மோசமான ஆண்டு
2019-ம் ஆண்டு இந்திய மக்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே கருதப்படுகிறது. ஒரு புறம் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வேலையின்மை என மக்களை படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசண்ட், இந்தியாவிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலையால், ஐடி துறையிலும் மந்தநிலை நீடித்து வருகிறது.
பல முறை பணி நீக்க அறிக்கை
இதன் எதிரொலி காக்னிசண்ட் நிறுவனத்திலும் தீவிரமடைந்து வருகிறது அதிலும் இதற்கு முன்பும் சில முறை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது. இந்த நிலையில் நிறுவனத்தில் நிலவி வரும் மந்த நிலையினை போக்கவும், செலவினை குறைக்கவும், இந்த நிறுவன, பணி நீக்கம் என்னும் அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.
மூத்த அதிகாரிகள் பணி நீக்கம்
இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பார்வை அதிகளவில் சம்பளம் வாங்கும் மூத்த அதிகாரிகள் மேல் பதிர்ந்துள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் 80 லட்சம் ரூபாய் முதல் 1.2 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்கும் சீனியர் லெவல் ஊழியர்களில், 350 பேர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பாதிப்பு அதிகம் இருக்காது
ஒரு புறம் இந்த பணி நீக்க குறித்த கவலை, காக்ணிசன்ட் ஊழியர்கள் மத்தியில் இருந்து வந்தாலும், இதில் சந்தோஷப்படக் கூடிய விஷயம் என்னவெனில், இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் இந்தியர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது தான். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காக்னிசண்ட் நிறுவனத்தின் பல கிளைகளில் உள்ள 50 முதல் 55 வயதுடைய மூத்த பணியாளர்களின் வேலை பறிபோகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் இதில் அதிகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
அறிக்கை உறுதி
இதற்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் இருந்து வந்தாலும், பணி நீக்கம் சொன்னதை போல் அதிகளவில் இல்லை என்றாலும், தற்போது காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான கரென் மெக்லாலின் இதை உறுதி படத் தெரிவித்துள்ளார். ஆக வரும் மாதங்களில் செலவைக் குறைக்க இன்னும் பணி நீக்க நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் எத்தனை பேர்?
காக்னிசண்ட் நிறுவனத்தில் 2017ம் ஆண்டின் படி மொத்தம் சுமார் 2,60,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியாவில் 1,80,000 ஊழியர்களும், இதே வட அமெரிக்காவில் 50,400 ஊழியர்களும், ஐரோப்பாவில் 13,800 பேரும், இதே மற்ற நாடுகளில் 15,800 பேரும் பணியாற்றி வருகின்றனர். இதே 2018ம் ஆண்டின் படி இந்தியாவில் 1,94,700 ஊழியர்களும், வட அமெரிக்காவில் 50,000 ஊழியர்கள், ஐரோப்பாவில் 18,300 பேரும், மற்ற நாடுகளில் 18,600 பேரும் பணியாற்றி வருகின்றனர்.
பணி நீக்கம் தொடரும்
கடந்த மாதம் காக்னிசண்ட் வெளியிட்டிருந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 16,000 பேரை வேலையை விட்டுத் தூக்கப்போவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில் வரவிருக்கும் காலாண்டில் 10,000 - 12,000 நடுத்தர ஊழியர்கள் பணி நீக்கம் செய்யலம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கண்டெண்ட் மாடரேசன் தொழில் பிரிவில் 6,000 பேரை வேலையை விட்டு நீக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் பாதிப்பு இருக்கலாம்
இந்தியாவில் தற்போது வர இருக்கும் பணி நீக்கத்தில் இந்தியர்களுக்கு பிரச்சனைகள் இல்லை எனினும், வரவிருக்கும் காலாண்டுகளில் பிரச்சனை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நடுத்தர ஊழியர்கள் பணி நீக்கம் செய்யும் போது, அதன் இந்தியக் கிளைகளிலும் பணி நீக்கம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.