இந்தியாவில் அதிக ஐடி வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் மிக முக்கியமான நிறுவனமாக விளங்கும் காக்னிசென்ட் அமெரிக்காவைத் தலைமையிடமாக வைத்திருந்தாலும் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை நியமித்துத் தனது சர்வதேச வர்த்தகத்திற்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் காலாண்டில் காக்னிசென்ட் நிறுவனத்தின் மொத்த வருமானத்தின் அளவு 37.6 சதவீதம் அதிகரித்து 505 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் லாபம் அளவு 367 மில்லியன் டாலராக உள்ளது.
மேலும் ஜனவரி - டிசம்பர் நிதியாண்டாகப் பின்பற்றும் காக்னிசென்ட் 2021ல் வருவாய் அளவீட்டில் 7 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2021 உடன் முடிந்த காலாண்டில் 4.4 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் பெற்றுள்ளது, இது கடந்த ஆண்டை விடவும் 4.2 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் காலாண்டில் வருவாய் மற்றும் வர்த்தகம் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருந்தது கிளவுட் மைகிரேஷன், டிஜிட்டல் அடாப்ஷன் பிரிவுகள் தான், இனி வரும் காலத்திலும் இப்பிரிவு மூலம் அதிகளவிலான வர்த்தகம் கிடைக்கும் எனக் காக்னிசென்ட் சிஇஓ ப்ரைன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் UNICEF வாயிலாக இந்தியாவிற்குக் காக்னிசென்ட் உதவி செய்ய உள்ளதாக இந்நிறுவன சிஇஓ ப்ரைன் தெரிவித்துள்ளார்.