இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் எப்போதும் இல்லாத வகையில் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களைத் தடுக்கும் வகையில் 30 மில்லியன் டாலர் அளவிலான போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனத்தில் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேறும் போது நிர்வாகம் இந்த நிகழ்வைத் தடுப்பதற்காக ஊழியர்களைத் தக்கவைக்கும் விதமாகத் தற்காலிகமாக, குறிப்பிட்ட தொகையைப் போனஸ் ஆகக் கொடுத்து சில வருடங்கள் தக்க வைக்க முயற்சி செய்யும். இது ஐடி துறையில் மிகவும் சகஜமான விஷயம் என்றாலும் காக்னிசென்ட் இதுபோன்ற நடவடிக்கையை இதுவரை எடுத்தது இல்லை எனக் கூறப்படுகிறது.
Attrition Rate உயர்வு
2020ஆம் ஆண்டில் இந்திய ஐடி துறையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் ஊழியர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்த அச்சம் அதிகமாக இருந்த காரணத்தால் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் அளவீடு பெரிய அளவில் குறைந்து இருந்தது. ஆனால் காக்னிசென்ட் நிறுவனத்தின் Attrition Rate சக ஐடி நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக இருக்கிறது.
சிறந்த ஊழியர்கள்
காக்னிசென்ட் நிறுவனத்தின் Attrition rate குறைக்க வேண்டும் என்பதற்காக இந்நிறுவனத்தில் பணியாற்றும் சிறந்த ஊழியர்கள் (Top Performers), டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறன் வாய்ந்த ஊழியர்கள் ஆகியோரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக Retention போனஸ் ஆகச் சுமார் 30 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
போனஸ் தொகை
இந்தப் போனஸ் தொகையை ஊழியர்கள் உடனே அனைவருக்கும் அளிக்காமல் பிற நிறுவனங்களில் வேலை வாங்கிய பின்பு காக்னிசென்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முடிவு செய்தவர்களுக்குக் கொடுக்கக் காக்னிசென்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
19 சதவீதமாக உயர்வு
கொரோனா காலத்தில் எந்த அளவிற்கு ஐடி ஊழியர்களுக்கு வேலை குறித்த பயம் இருந்ததோ, அதே நேரத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவானது. இதனால் காக்னிசென்ட் நிறுவனத்தில் வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் 2020ல் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ப்பு விகிதம் 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிய வேலைவாய்ப்புகள்
குறிப்பாகப் புதிய வேலைவாய்ப்புகளுக்காக நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் அதிகரித்த காரணத்தால் 10 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் காலாண்டில் கூடுதலாக 1 சதவீதம் உயர்வு ஏற்பட்டு வருடாந்திர Attrition Rate அளவீடு 19 சதவீதமாக உயர்ந்தது.
மறுசீரமைப்பு நடவடிக்கை
காக்னிசென்ட் தனது வர்த்தகத்தை டிஜிட்டல் பிரிவுக்கு மாறத் திட்டமிட்டு நிர்வாகம் மற்றும் வர்த்தக முறையில் பல்வேறு மாற்றக்களைச் செய்து மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் காரணத்தால் அதிகளவிலான ஊழியர்கள் வெளியேற முக்கியக் காரணமாக உள்ளது என லண்டனை சேர்ந்த ஐடி துறை ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சப்ளை - டிமாண்ட் பிரச்சனை
இதேபோல் காக்னிசென்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ராஜேஷ் நம்பியார் கூறுகையில், சந்தையில் தற்போது டிஜிட்டல் திறன் கொண்டு ஊழியர்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் இருக்கும் காரணத்தாலும், இப்பிரிவில் மிகவும் குறைவான அளவிலான ஊழியர்கள் மட்டுமே இருக்கும் காரணத்தால் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.