இந்தியாவில் அதிகளவிலான ஐடி துறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் நிறுவனம் தனது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்க உள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் காக்னிசென்ட் நிறுவன ஊழியர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஏன் இந்தத் திடீர் அறிவிப்பு..? எதற்காக 25 சதவீத கூடுதல் சம்பளம்..?
காக்னிசென்ட்
கொரோனா பாதித்துள்ள இந்த நேரத்திலும் எவ்விதமான தடையும், பிரச்சனையுமின்றிப் பணியாற்றும் ஊழியர்களைப் பாராட்டும் வகையில். அசோசியேட் மற்றும் அதற்குக் கீழ் பதவிகளில் இருக்கும் இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அதிகச் சம்பளத்தைக் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
1.3 லட்ச ஊழியர்கள்
காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 1,30,000 ஊழியர்கள் கூடுதல் சம்பளத்தைப் பெற உள்ளனர் எனக் காக்னிசென்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகளவில் மக்கள் கொரோனா குறித்த பயத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் காக்னிசென்ட் ஊழியர்கள் கடுமையான உழைத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த 25 சதவீத கூடுதல் சம்பளத்தை அறிவித்துள்ளது காக்னிசென்ட்.
மேலும் இந்தச் சம்பள உயர்வு ஏப்ரல் மாத சம்பளத்திலேயே ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனக் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
வர்த்தகப் பாதிப்பு
கடந்த 10 வருடத்தில் யாரும் பார்த்திராத ஒரு பாதிப்பை உலகம் முழுவதும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிற சர்வதேச நிறுவனங்களைப் போலேவே காக்னிசென்ட் நிறுவனமும் பல்வேறு வர்த்தகச் சிக்கல்களை லண்டன் முதல் மும்பை வரையிலும், மனிலா முதல் நியூயார்க் வரையில் சந்தித்து வருகிறது. இவை அனைத்தையும் தாண்டி மக்களின் உடல்நலம் கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதித்து வருகிறது எனப் பிரையன் தெரிவித்துள்ளார்.
Work From Home
வர்த்தகம் பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவை எந்த அளவிற்கு வரும் காலத்தில் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை என்றும் பிரையன் கூறியுள்ளார்.
இருப்பினும் தற்போது காக்னிசென்ட் ஊழியர்களில் 90 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
இந்தியாவில் மட்டும் காக்னிசென்ட் சுமார் 2,03,700 வேலைவாய்ப்புகளை உருவாக்கி ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி 1,30,000 ஊழியர்கள் 25 சதவீதம் கூடுதல் சம்பளம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.