இந்தியாவை சேர்ந்த முன்னணி ஐடி சேவை நிறுவனமான காக்னிசென்ட் (Cognizant) நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நீண்ட காலமாகவே விசா முறைகேடு புகார்கள் அதிகரித்துள்ளன. இது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக , காக்னிசென்ட் நிறுவனத்தின் கிரீன் கார்டு விண்ணப்ப பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை பெற்று தர PERM (Program Electronic Review Management) எனப்படும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்களை ஐடி நிறுவனங்கள் தான் ஊழியர்களுக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் காக்னிசென்ட் நிறுவனம் PERM விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. H-1B மற்றும் PERM விசா திட்டங்களில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை முடியும் வரை காக்னிசென்ட் நிறுவனம் புதிய PERM விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடியாது.
இதேபோல், கிளவுடரா என்ற மற்றொரு நிறுவனமும் இந்த PERM தடையின் கீழ் வந்துள்ளது. அமெரிக்க தொழிலாளர் துறை அதிகாரி அந்தனி டி எஸ்போசிட்டோ வெளீயிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அமெரிக்க ஊழியர்களின் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது என எச்சரித்துள்ளார். மோசடி தடுப்பு பணிக்குழுவுடன் இணைந்து இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும், உண்மைகள் மற்றும் நிதி முறைகேடுகள் கண்டறியப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காக்னிசென்ட் நிறுவனத்தின் மீதான இந்த அதிரடி நடவடிக்கை இந்தியாவை சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனங்களான TCS, Infosys, Wipro, HCL மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் H-1B விசாக்களின் ஒப்புதல் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த புதிய நெருக்கடி இந்திய IT நிறுவனங்களுக்கு இணக்கச் செலவுகளை அதிகரிக்க செய்யும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய இந்த தடையானது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள PERM ஒப்புதல்களையோ அல்லது தற்போதைய H-1B விசாக்களையோ நேரடியாக பாதிக்காது என்றாலும், புதிய விண்ணப்பங்கள் மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவில் செயல்படும் ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்த விரும்பினால், அவர்கள் முதலில் தொழிலாளர் துறையிடம் PERM ஒப்புதலை பெற வேண்டும். அந்த குறிப்பிட்ட வேலைக்கு தகுதியான அமெரிக்க குடிமக்கள் யாரும் கிடைக்கவில்லை என்பதையும், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது அமெரிக்கர்களின் ஊதியத்தையோ அல்லது வேலை நிலைமைகளையோ பாதிக்காது என்பதையும் நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும். இந்த PERM ஒப்புதல் கிடைத்த பிறகு தான், வேலை சார்ந்த கிரீன் கார்டிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
கடந்த ஜூலை மாதம் முதல் H-1B மற்றும் PERM வேலைவாய்ப்பு விசா முறைகளில் தீவிர விசாரணையை அமெரிக்க அரசு நடத்தி வருகிறது. தற்போது காக்னிசண்ட் நிறுவனத்திற்கு விசா விண்ணப்பம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அர்த்தம் இல்லை என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இது ஒரு விசாரணைக்கான நடவடிக்கையே என விளக்கம் தந்துள்ளனர்.
காக்னிசென்ட் நிறுவனம் கடந்த 1994 ஆம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது நியூ ஜெர்சியின் டீனெக் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் தரவுகளின்படி, காக்னிசென்ட் நிறுவனம் கடந்த காலங்களை விட சமீபத்தில் குறைவான H-1B விசாக்களையே பெற்றுள்ளது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையில் காக்னிசென்ட் இந்தியாவில் இருந்து புதிதாக ஐடி ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பது பணி அமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications


