ஊழியர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன் செய்யும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பும் விடுப்பும் கொடுக்க வேண்டும் என பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது நினைப்பது இல்லை. இதனால் பல ஊழியர்களும் work life balance செய்ய முடியாமல் பெரும் மன உளைச்சலில் சிக்குகின்றனர். வீட்டில் இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு கூட விடுப்பு தர யோசிக்கும் முதலாளிகளுக்கு மத்தியில் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு முதலாளியின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியரின் துயரமான சூழலில் காட்டிய மனிதநேயம் சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரான விபின் பாபுராஜன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் விபின் பாபுராஜனின் சகோதரியின் தந்தை சமீபத்தில் காலமான போது அவர் வேலை செய்து வந்த கோவையை சேர்ந்த நிறுவனம் ஒரு மாதம் விடுப்பு வழங்கியதாக கூறியுள்ளார்.

மேலும் சகோதரியின் தந்தையின் இறப்புக்கு முன்பு சிகிச்சைக்காக செலவிடப்பட்ட தொகையில் 20 சதவீத மருத்துவ செலவை அந்த நிறுவனமே ஏற்றுக்கொண்டது. தந்தை இறந்த துக்கத்திலிருந்து மீண்டு வரவும், மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் அந்த பெண் ஊழியருக்கு நான்கு வாரங்களுக்கும் மேலாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.
தந்தையை இழந்து வாடிய அந்த ஊழியரிடம், நிறுவனத்தின் தலைவர் நேரில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் என்றார். அவர் எந்த நிறுவனம் என பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அதன் பிரம்மாண்டம் மற்றும் பாரம்பரியம் குறித்து சில விவரங்களை பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஒரு பாரம்பரிய நிறுவனம், 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது, இந்நிறுவனத்தில் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என கூறியுள்ளார்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள நிலையில், கோவை நிறுவனம் தனது ஊழியரின் தனிப்பட்ட துயரத்தில் இப்படி ஆதரவாக நின்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நமது பெற்றோர்கள் ஏன் தங்கள் முதலாளிகளிடம் இவ்வளவு விசுவாசமாக இருந்தார்கள் என்பதில் ஆச்சரியமில்லை என விபின் பாபுராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பலரும் அந்த நிறுவனத்தின் முதலாளியை பாராட்டி வருகின்றனர்.
வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என நிறுவனங்களும் பெரும் முதலாளிகளும் கூறி வரும் நிலையில் ஊழியரின் உணர்வை புரிந்து கொண்டு ஒரு நிறுவனமும் முதலாளியும் செயல்பட்டிருப்பது வியக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

