கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மாவட்டமாக இருந்து வருகிறது . கோயம்புத்தூர் நகரை பொறுத்தவரை வேலை வாய்ப்பு , தொழில்துறை என பல்வேறு பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாக மாறி வருகிறது.
கோயம்புத்தூர் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சிகளுக்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு எப்படி செம்மொழி பூங்கா ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமாக இருக்கிறதோ அதேபோல கோயம்புத்தூரிலும் ஒரு செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கோயம்புத்தூர் செம்மொழி பூங்கா எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. கோயம்புத்தூர் நகரின் காந்திபுரம் மத்திய சிறை சாலை பகுதிக்கு அருகே செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது . பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றன. கடந்த ஜூன் மாதமே இந்த பூங்கா திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சொல்லப்பட்டது ஆனால் சில பணிகள் தாமதமானதால் அப்போது திறக்கப்படவில்லை .
இந்த சூழலில் செம்மொழிப் பூங்கா வரும் 26 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 167 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் நுழைவாயிலிலேயே மிகப்பெரிய மலை முகப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது . அதற்கு இடையே மரங்கள் வைக்கப்பட்டு விலங்கினங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

நீர்வீழ்ச்சி போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடையேழு வள்ளல்களில் சிற்பங்களும், பூந்தோட்டங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது தவிர திறந்தவெளி அரங்கம், நீரூற்று ,குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் , புல்தரை போன்றவை அமைக்கப்பட்டு இருக்கின்றன.
கோயம்புத்தூர் விழா நடைபெற்று வருகிறது , இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 26 ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் செம்மொழி பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார் என்ற தகவலை வெளியிட்டார்.
ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 23 வகையான தீம் அடிப்படையிலான தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. நூறு வகையான ரோஜா பூக்களை வளர்ப்பதற்கு என மூன்று பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. நம்ம கோவை சிட்டிசன் செயலி வாயிலாக இந்த பூங்காவிற்கான டிக்கெட் வாங்குவது, வழிகாட்டுவது என டிஜிட்டல் முறையிலான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications