கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான கோயம்புத்தூர், குட்டி பெங்களூர் என்றே பலரும் அழைக்கின்றனர். 2020க்கு பின்பு ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் ஐடி - ஜிசிசி நிறுவனங்களின் எண்ணிக்கை, அதிகப்படியான இளம் தலைமுறை மக்கள் தொகை, கிளைமேட் என அனைத்திலும் பெங்களூருடன் போட்டிப்போடுகிறது.
இந்த நிலையில் தினமும் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்காக கோயம்புத்தூர்க்கு குடிபெயரும் நிலையில் முதல்வர் விஜய் முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி துறை அமைச்சகம் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நிர்வாகம் கோயம்புத்தூரின் முக்கிய மைய பகுதியான ரேஸ் கோர்ஸ்-ல் சுமார் 9.71 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் வாடகை வீடு திட்டத்தின் கீழ் அப்பார்ட்மென்ட் ஸ்டைல் வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டு உள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பி.ராஜ்குமார் தலைமையில் நடந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் இதற்கான உத்தரவை விடுத்தார். அரசுக்கு சொந்தமாக இப்பகுதியில் 3.3 ஏக்கர் + 6.41 ஏக்கர் என இரண்டு இடங்கள் உள்ளது, இந்த இடத்தில் அப்பார்ட்மென்ட் மாடலில் பொதுமக்களுக்கான வாடகை வீட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது வாடகை வீடு தேடும் பல ஆயிரம் மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பது மட்டும் அல்லாமல் மலிவான விலையில் வீடுகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தவும், அப்பார்ட்மென்ட் கட்டுவதற்கான முதல்கட்ட ஒப்புதலை DTCP-யிடம் இருந்து பெற உள்ளது.
இத்திட்டத்திற்கு பெரிய அளவிலான வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கும் என தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்புகிறது. இதற்கு முக்கியமான காரணம் 2016ல் 512 கோடி ரூபாய் மதிப்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் 14 மாடி குடியிருப்பில் சுமார் 1848 வீடுகள் கட்டப்பட்டன. இதில் 15-20 வீடுகள் மட்டுமே இன்னும் மக்கள் குடியேராமல் உள்ளனர், மற்ற அனைத்து வீடுகளிலும் மக்கள் குடியுள்ளனர்.
கவுண்டம்பாளையம் வாடகை வீட்டு திட்டத்தில் A,B,C,D என 4 வகையிலான வீடுகள் 1192.53 சதுரடி முதல் 558.23 சதுரடி வரையிலான வீடுகள் கட்டப்பட்டு தற்போது மக்கள் தங்கியுள்ளனர். இதனால் ரேஸ் கோர்ஸ் சாலை திட்டமும் பெரிய அளவில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அமைச்சர் பி.ராஜ்குமார் கணபதி, சிங்காநல்லூர், பொள்ளாச்சி, சீரநாயக்கன்பாளையம் என 4 முக்கிய பகுதிகளில் பல்வேறு குடியிருப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்தார். இதில் கணபதியில் அதிக வருமானம் கொண்டர்கள் தங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டது.


Click it and Unblock the Notifications