ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலையேற்றத்தின் படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இது மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இனி பயனாளர்கள் வணிக சிலிண்டர்களுக்கு கூடுதலாக 100 ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
சென்னையில் என்ன நிலவரம்
குறிப்பாக சென்னையில் சிலிண்டர் விலை 2,234.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இந்த வணிக சிலிண்டரின் விலை 2,133 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே மும்பையில் 2,051 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 2,174.50 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே டெல்லியில் 2,101 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு
இரண்டாவது மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வணிக கேஸ் விலையானது, பயனாளர்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். ஏனெனில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இதன் விலையானது 266 ரூபாய் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இரண்டு மாதங்களில் 366 ரூபாய் ஒரு சிலிண்டருக்கு விலை கூடியிருக்கிறது.
எரிவாயு விலையில் மாற்றமில்லை
எனினும் இது பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது சற்று ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விலை எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி 14.2 கிலோ எடையுள்ள இந்த சமையல் எரிவாயு விலையானது டெல்லியில் 899.50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 926 ரூபாயாகவும், சென்னையில் 915.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. கடைசியாக இந்த சிலிண்டர்களின் விலையானது அக்டோபர் 6 அன்று அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவற்றின் விலை அதிகரிக்கலாம்
ஆக பொதுமக்கள் பயன்படுத்தும் எரிவாயு விலை அதிகரிக்காமல் இருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், கமர்ஷியல் சிலிண்டர்களின் விலையானது ஹோட்டல்கள், பேக்கரிகள், டீ கடைகள் என பலதரப்பு நுகர்வோரையும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உணவு, டீ காபி விலைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.