தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு முன்பு சமையில் சிலிண்டர் விலை அதிகரிக்கும் எனக் கணித்திருந்த நிலையில், இன்று எரிவாயு நிறுவனங்கள் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பும் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எரிவாயு நிறுவனங்கள் வீட்டில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தாமல் வர்த்தகச் சிலிண்டர் விலையை மட்டும் உயர்த்தியுள்ளது.
சமையல் எரிவாயு விலை
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதைப் போலவே சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட வேண்டிய நிலைக்கு எரிவாயு நிறுவனங்கள் தள்ளப்பட்டு உள்ளது.
மானியம்
மத்திய அரசு எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான மானியத்தை முழுமையாக நீக்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப இந்தியாவில் விலை மாற்றத்தைச் செய்ய எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவனங்களுக்கு இருக்கும் ஓரே வழி விலை உயர்வு.
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தைத் தினசரி அடிப்படையில் எரிபொருள் நிறுவனங்கள் செய்து வரும் நிலையில், சிலிண்டர் விலை உயர்வை மட்டும் மத்திய அரசின் அனுமதிக்குப் பின்பே செய்து வருகிறது. இதனால் பல நாட்கள் காத்திருப்புக்கு பின்பு தற்போது விலையை உயர்த்தியுள்ளது.
வர்த்தக எல்பிஜி சிலிண்டர்
இன்று எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை கிலோவிற்கு 14 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரம் என்பதால் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட ஒரு வர்த்தக எல்பிஐ சிலிண்டர் விலை 266 ரூபாய் அதிகரித்துள்ளது.
டெல்லி விலை நிலவரம்
இதன் மூலம் 1734 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக எல்பிஐ சிலிண்டர் விலை தற்போது 2000.50 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
மக்களுக்கு மறைமுகப் பாதிப்பு
வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை உயரவில்லை என்றாலும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்படுவார்கள். தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்கள் அதிகளவிலான உணவுப் பொருட்களை வாங்கும் நிலையில், தற்போதைய விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.