ஈரானில் நடந்து வரும் போர் சூழலின் காரணமாக சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்று பயந்து கொண்டிருந்த இல்லத்தரசிகளுக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையை உயர்த்தாமல் வைக்க அரசு முடிவு செய்துள்ளது. மறுபுறம் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சற்று கவலை அளிக்கும் வகையில் கமர்சியல் சிலிண்டர்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதோடு சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அது என்னென்ன மாற்றங்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

விநியோகத் தட்டுப்பாட்டின் காரணமாக தேர்தல் முடிந்த கையோடு விலை உயர்ந்து விடுமா என்று எதிர்பார்த்திருந்த சாமானிய மக்களுக்கு சற்று நிம்மதி தரும் வகையில் வீட்டில் பயன்படுத்தப்படும் டொமஸ்டிக் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தற்போது ரூ. 928.50-ஆக உள்ளது.
ஆனால் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் கமர்சியல் சிலிண்டரின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சிலிண்டருக்கு 993 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் 19 கிலோ எடையுள்ள கமர்சியல் சிலிண்டர் தோராயமாக ரூ.2000-த்ற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த விலை 3000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஈரான் போர் பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று தொடங்கியது. அதிலிருந்து கமர்சியல் சிலிண்டரின் விலை சுமார் 3 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் முதல்முறையாக ஒரு சிலிண்டருக்கு 144 ரூபாய் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று மீண்டும் 200 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
மூன்று முறை ஏற்பட்ட விலை உயர்வின் காரணமாக உணவகங்கள், சாலையோர கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் அன்றாட சமையலுக்கு எரிபொருளையே பெரிதும் நம்பி இருக்கின்றன.
இன்றைய விலை உயர்வு ஏற்படுவதற்கு முன்னரே பல ஹோட்டல்களில் அடுப்பில் சமைக்க தொடங்கியதைப் பார்த்தோம். அப்படி இருக்கையில் மீண்டும் மீண்டும் ஏற்பட்டிருக்கும் சிலிண்டர் விலை உயர்வினால் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மே 1 முதல் அமலுக்கு வரும் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுக்கான புதிய விதிகள்: வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தாலும் நகரங்களில் வசிக்கும் குடும்பங்கள் இனி 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும். இதற்கு முன்னர் 21 நாட்கள் கடந்து விட்டாலே நீங்கள் மீண்டும் எல்பிஜி சிலிண்டர் பெறலாம். கிராமப்புறங்களில் இந்த கால இடைவேளை 45 நாட்களாக உள்ளது.
இந்தியாவின் 3 முக்கியமான OMC நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(Indane), பாரத் பெட்ரோலியம் (Bharat Gas) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP Gas) ஆகியவையும் இந்தப் புதிய விதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை: சில நாட்களுக்கு முன்பு போரின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற காரணத்தினால் மக்கள் பேரல்களிலும், பெரிய கேன்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கியதைப் பார்த்தோம். அப்படி இருக்கையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் (ATF) எரிபொருளின் விலையிலும் அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.


Click it and Unblock the Notifications