இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்களை வணிகத்திற்காக பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ சிலிண்டர்களின் விலையை இன்று உயர்த்தியுள்ளது. இதன் மூலம் LPG சிலிண்டர் பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை அதிகரிக்கும்.
இந்த விலை உயர்வு, மார்ச் 1, 2025 சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று வெளியான அறிவிப்பின் படி நாட்டின் தலைநகரான டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 1,803 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது முந்தைய விலையான 1,797 ரூபாயிலிருந்து 6 ரூபாய் அதிகரித்துள்ளது. மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற முக்கிய பெருநகரங்களிலும் இதேபோன்ற மாற்றங்கள் நடந்துள்ளது.

குறிப்பாக, மும்பையில் வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை 1,755 ரூபாயாக திருத்தப்பட்டுள்ளது, இது 1,749.50 ரூபாயிலிருந்து உயர்ந்துள்ளது. அதேபோல், கொல்கத்தாவில் உள்ள வணிக நிறுவனங்கள் இப்போது 1,913 ரூபாய் செலுத்த வேண்டும், இது 1,907 ரூபாயிலிருந்து அதிகரித்துள்ளது.
சென்னையில், விலை 1,965 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது 1,959.50 ரூபாயிலிருந்து அதிகரித்துள்ளது. இந்த மாற்றங்கள் நாட்டின் முக்கிய நகர்ப்புற மையங்களில் சீரான கொள்கையை குறிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த விலை உயர்வு பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட விலை குறைப்பைத் தொடர்ந்து வந்துள்ளது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலையை 7 ரூபாய் குறைத்திருந்தன, இது எரிபொருள் விலையின் மாறும் தன்மையை வெளிப்படுத்துகிறது.
வணிக சிலிண்டருக்கு மாறாக, 14.2 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தும் வீடுகளின் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் பழைய விலையே தொடர்கிறது. இந்த விலைகள் ஆகஸ்ட் 2024 முதல் மாறாமல் உள்ளன. டெல்லியில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 803 ரூபாயாக உள்ளது. மும்பையில், விலை 802.50 ரூபாயாக உள்ளது.
கொல்கத்தாவில் வசிப்பவர்கள் தொடர்ந்து 829 ரூபாய் செலுத்துகின்றனர், சென்னையில், விலை 818.50 ரூபாயாக உள்ளது. வணிக எரிபொருள் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை மாறாமல் இருப்பது மக்களுக்கு நன்மை அளிக்கிறது.
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு, உணவகங்கள், சிறிய தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் என எல்பிஜி-யை நம்பியிருக்கும் நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை சிறிய அளவில் அதிகரிக்கும், ஆனால் இது வாடிக்கையாளர் செலுத்தும் தொகையில் மாற்றம் ஏற்படுத்துமா என்றால் கேள்விக்குறியே. காரணம் வெறும் 6 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications