கொரோனா வைரஸ் நடுத்தர மக்களுக்கு சம்பள பயத்தைத் தான் காட்டிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கும், குடியேறி வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை பயத்தையே காட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ்.
அவர்களின் வேலை வாய்ப்புகள், தினமும் சம்பாதிக்கும் கூலி, உணவு என அன்றாட வாழ்கையை போராட்ட மாயமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகை இல்லை.
மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு முக்கிய காங்கிரஸ் பேனல் கூட்டம் இன்று காலை நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, சிறு குறு தொழில் முனைவோர்கள் பிரச்சனை, விவசாயிகளிடம் இருந்து பயிர்களை கொள்முதல் செய்வது, குடியேறி வருபவர்கள் பிரச்சனை குறித்து விவாதித்து இருக்கிறார்கள்.
பெரும் திட்டம்
விரைவில், காங்கிரஸ் ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்கப் போகிறார்களாம். இந்த திட்டத்தில் MSME என்று சொல்லப்படும் சிறு குறு தொழில்முனைவோர்களின் பிரச்சனைகளை எப்படி சமாளிபப்து விவசாயிகளிடம் எப்படி பொருட்களை கொள்முதல் செய்வது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் இருக்குமாம். அந்த திட்டத்தை மத்திய அரசிடம் முன் வைக்க இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் சொல்லி இருக்கிறார்.
7,500 ரூபாய்
நேரடி பணப் பரிமாற்ற முறை மூலம், ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அனைத்து பென்ஷந்தாரர்கள் மற்றும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கும் அரசு ரூ. 7,500 டெபாசிட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதாகச் சொல்லி இருக்கிறார் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
பணம் கிடைக்கும்
ஒரு பொறுப்பான அரசு மற்றும் மக்கள் மீது அக்கறை இருக்கும் அரசால், தேவையான நிதியைக் கொண்டு வர முடியும். அந்த நிதியை அதிகம் பாதிக்கப்படும் மக்களுக்கும் வழங்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.