சாமானிய மக்கள் சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் சோகத்தில் மூழ்கியுள்ளனர், ஆம் 2021ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை சுமார் 190 ரூபாய் வரையில் உயர்ந்து, கடந்த 16 நாட்களில் இரு முறை விலை உயர்த்தப்பட்டு 50 ரூபாய் வரையில் இதன் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு அனைத்து அரசு எரிவாயு நிறுவனங்களையும் ஓரே தளத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் இணைப்பை மக்கள் எந்த நிறுவனத்திற்கு வேண்டும் என்றாலும், எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும்.
சமையல் சிலிண்டர்
மத்திய அரசு இந்தியாவில் சமையல் சிலிண்டர் விற்பனை செய்யும் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் மற்றும் பார்த் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் நிறுவனங்கள் அனைத்தையும் ஓரே கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
சிலிண்டர் இணைப்பை
இதன் திட்டம் மூலம் சமையல் சிலிண்டர் இணைப்பைக் கொண்ட வாடிக்கையாளர்கள் வெறும் மொபைல் எண்-ஐ மட்டுமே வைத்து தங்களுக்கி பிடித்த மற்றும் ஏதுவான நிறுவனத்திற்கு எவ்விதமான தடையுமின்றி மாற்றிக்கொள்ளும் சேவையைக் கொண்டு வர உள்ளது. இந்தத் திட்டம் குறித்து மத்திய ஆய்வு செய்து வருவதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டீலர்கள்
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் சரியான விநியோகம் இல்லாத டீலர்களிடம் இருந்து சிலிண்டர் இணைப்பை மிகவும் சுலபமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இந்த இணைப்பு மாற்றத்திற்குக் கட்டணம் ஏதேனும் இருக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
3 எரிவாயு நிறுவனங்கள்
இந்தியன் ஆயில் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் மற்றும் பார்த் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து மென்பொருள் உருவாக்கி வருகிறது. இந்த மென்பொருளில் 3 நிறுவனங்களின் LPG இணைப்பு தரவுகளை இணைக்க முடியும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
29.1 கோடி இணைப்புகள்
இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி முடிவில் சுமார் 291.1 மில்லியன் சமையல் சிலிண்டர் இணைப்புகள் உள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் இப்புதிய மென்பொருள் உதவியுடன் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் பிற டீலர்கள் அல்லது பிற நிறுவன சேவைக்கு மாற முடியும்.
ஓரே நெட்வொர்க்
தற்போது இந்தியா முழுவதும் ஓரே நெட்வொர்க்-ல் இருக்கும் சிலிண்டர் இணைப்பை வெவ்வேறு டீலர்கள் மத்தியில் மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் தற்போது வேறு நிறுவனங்களுக்கே எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் செல்வோருக்கு பெரிய அளவில் உதவும்.